என் மலர்
செய்திகள்

ஊட்டியில் சமூக இடைவெளி கடைபிடிக்காத கடை, வணிக நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்
ஊட்டி:
நீலகிரியில் இன்று முதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் நேற்று காலை ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர், மஞ்சூர் பகுதிகளில் மார்க்கெட், உழவர் சந்தை, வணிக நிறுவனங்கள், என அனைத்து கடைகள் திறக்கப்பட்டிருந்தன.
காலை, 11 மணிக்கெல்லாம் அத்தியாவசிய பொருட்கள் விற்று தீர்ந்தது. கடைகளில் கூடியிருந்த மக்கள் அனைவரும் சமூக இடைவெளியை மறந்து கூட்டம், கூட்டமாக நின்றிருந்தனர். ஒருசிலர் முக கவசம் அணியாமல் வாகனங்களில் சுற்றி திரிந்தனர்.
நேற்று முகூர்த்த நாள் என்பதால் அதிகமான திருமணங்கள் நடந்தன. அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிக்கவில்லை. அதில் ஏராளமானோர் சமூக இடைவெளி இன்றி கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்பது குறித்து உள்ளாட்சி அமைப்பினர் ஆய்வு மேற்கொண்டு அபராதம் விதித்தனர்.
இதில் முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம், சமூக இடைவெளி கடைப்பிடிக்காத கடைகளுக்கு, ரூ. 4 லட்சமும், திருமண நிகழ்ச்சியில் விதி மீறலுக்கு ரூ.3 லட்சம் என மொத்தமாக நேற்று ஒரே நாளில் ரூ.10 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.






