என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    வேளாளர் என்ஜினீயரிங் கல்லூரியில் 250 படுக்கை வசதியுடன் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட தொடங்கியது

    5 வகையான பரிசோதனைகள் முடிக்கப்பட்டு அறிகுறி இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்த வசதி இருந்தால் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்பும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதையடுத்து மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி, ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி, அந்தியூர் ஐடியல் பள்ளி, கல்லூரிகளில் படுக்கை வசதிகள் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபோல் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட படுக்கை வசதியுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் அனைத்தும் மருத்துவமனையும் நிரம்பி வழிகின்றன.

    ஈரோடு மாநகர் பகுதியில் லேசன அறிகுறியுடன் உள்ளவர்களுக்கும், வீடுகளில் தனிமை படுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளவர்களுக்கும் கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சை மையங்களில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அங்கு தற்போது 500 படுக்கைகளும் நிரம்பி விட்டதால் திண்டலில் உள்ள வேளாளர் என்ஜினீயர் கல்லூரியில் 250 படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் நேற்று முதல் செயல்பட தொடங்கியுள்ளது.

    இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:-

    ஈரோடு மாநகர் பகுதியில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் ஈரோடு மாநகராட்சி மண்டபத்திலுள்ள ஸ்கிரீனிங் சென்டருக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். அங்கு 5 வகையான பரிசோதனைகள் முடிக்கப்பட்டு அறிகுறி இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்த வசதி இருந்தால் வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    அப்படி இல்லையென்றால் அவர்களை கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்திற்கு அழைத்து கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் உள்ள சிறப்பு சிகிச்சை மையங்களில் 500-க்கும் மேற்பட்ட படுக்கை வசதியுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அங்குள்ள 500 படுக்கைகளும் நிரம்பி விட்டதால் திண்டலில் உள்ள வேளாளர் பொறியியல் கல்லூரியில் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு 250 படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று மட்டும் 70 நோயாளிகள் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×