search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விசைத்தறிகள்
    X
    விசைத்தறிகள்

    ஈரோட்டில் 50 ஆயிரம் விசைத்தறிகளில் உற்பத்தி நிறுத்தம்

    ஈரோட்டில் 50 ஆயிரம் விசைத்தறிகளில் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் ரூ.200 கோடி துணிகள் தேக்கம் அடைந்துள்ளது.
    ஈரோடு:

    ஈரோட்டில் வீரப்பன்சத்திரம், மாணிக்கம்பாளையம், சித்தோடு, லக்காபுரம், சோலார், அசோகபுரம், விஜயமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு நாள் ஒன்றுக்கு 24 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி செய்யப்பட்டு மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா உள்பட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றது.

    நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால் வெளி மாநிலங்களில் இருந்து ஜவுளி ஆர்டர்கள் ஈரோடு விசைத்தறியாளர்களுக்கு கிடைப்பதில் சிக்கல் நிலவி வந்தது. ஏற்கனவே உற்பத்தி செய்த ஜவுளிகள் வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முடியாமல் ரூ.200 கோடி மதிப்பிலான துணிகள் தேக்கமடைந்துள்ளன.

    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் உற்பத்தி பாதியாக குறைக்கப்பட்டு தினந்தோறும் 12 லட்சம் மீட்டர் துணிகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளதால் விசைத்தறி உரிமையாளர்கள் நேற்று முதல் வருகின்ற 20-ந் தேதி வரை முழு உற்பத்தியை நிறுத்தி உள்ளனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செய்தி தொடர்பாளர் கந்தவேல் கூறியதாவது:-

    தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு காரணமாக ஏற்கனவே கடந்த மாதம் 20-ந்தேதி முதல் விசைத்தறி உற்பத்தியை 50 சதவீதமாக குறைத்து விட்டோம். இந்தநிலையில் இன்று (அதாவது நேற்று) முதல் மேலும் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து தொழிலாளர்களையும், உரிமையாளர்களையும் காக்கும் வகையில், வருகிற 20-ந்தேதி வரை முழுவதுமாக உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளோம்.

    மேலும் வட மாநிலங்களில் தற்போது தொற்று அதிகரித்துள்ள காரணத்தால் ஆர்டர்கள் வருவது தடைபட்டுள்ளது. ஏற்கனவே எடுக்கப்பட்ட ஆர்டர்களால் ரூ.200 கோடி மதிப்பிலான துணிகள் தேக்கமடைந்துள்ளன. இந்த முழு உற்பத்தி நிறுத்தம் மூலம் நாளொன்றுக்கு ரூ.7 முதல் ரூ.10 கோடி வரை உற்பத்தி பாதிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×