search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    கிருஷ்ணகிரியில் சொத்து தகராறில் கணவன்- மனைவி வெட்டிக்கொலை

    சொத்து தகராறில் கணவன், மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி வீரப்பன் நகரை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 55). இவர் மரவேலை செய்து வந்தார். இவரது மனைவி பப்பி ராணி (45). புகழேந்திக்கும் அவரது அண்ணன் இளங்கோவிற்கும் இடையே சொத்து தகராறு உள்ளது. இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை இளங்கோவின் மகன் லோகேஷ் (18), அவரது நண்பர் சதீஷ் (18) ஆகிய இருவரும் புகழேந்தி வீட்டிற்குச் சென்றனர். அங்கு புகழேந்தியிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த லோகேஷ் அவரது நண்பர் சதீஷ் ஆகிய இருவரும், புகழேந்தியை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். தடுக்க வந்த அவரது மனைவி பப்பி ராணிக்கும் வெட்டு விழுந்தது.

    இதில் கணவன், மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின்போது புகழேந்திக்கு ஆதரவாக பேசிய பக்கத்து வீட்டுக்காரர் கரிகாலன்(50), அவரது மனைவி சரசு (40)ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கபட்டனர்.

    தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட கணவன், மனைவி உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தம்பதியை கொலை செய்த லோகேஷ், அவரது நண்பர் சதீஷ் ஆகிய இருவரையும் கிருஷ்ணகிரி நகர போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. சொத்து தகராறில் கணவன், மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×