என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ஈரோட்டில் பரவும் கொரோனா- பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம்

    ஈரோடு மாநகராட்சியில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
    ஈரோடு:

    இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை சுனாமியாக மக்களை தாக்கி வருகிறது. வட மாநிலங்களில் கொரோனாவால் தினசரி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஊடகங்கள் கூறுகின்றன. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் சீதாராம் யச்சூரியின் மகன் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளார்.

    மத்திய மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என்று பலரும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி உள்ளனர். கடந்த ஆண்டு முதல் அலையின் போது தமிழகத்தில் எச்.வசந்தகுமார் எம்.பி, திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பிரபலங்களும் மரணம் அடைந்தனர்.

    கொரோனா அரக்கன் பிடியில் இருந்து மீண்டு வருவதாக நம்பிய நிலையில் 2-ம் அலை பெரும் சுனாமியாக உருவெடுத்து இருக்கிறது. இந்த முறை தொடக்கத்தில் இருந்தே கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் மரணத்தை தழுவும் சூழலுக்கு சென்று வருகிறார்கள்.

    ஈரோட்டில் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருகிறது. கொரோனா மரணம் என்ற தகவல் அதிகமாக கிடைக்கிறது. நண்பர், தெரிந்தவர்கள் கொரோனா மரணத்துக்கு ஆளாகும்போது அனைவருக்கும் அது அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.

    ஈரோடு மாநகராட்சியில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மக்களும் இதுதொடர்பாக மிகவும் எச்சரிக்கையாக இருக்க அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 152 பேர் மரணம் அடைந்து உள்ளனர்.

    கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பில் சிகிச்சை மற்றும் தனிப்படுத்தப்பட்டோர் பட்டியலில் 624 பேர் இருந்தனர். ஆனால் நேற்று முன்தினம் 1,689 ஆக உயர்ந்து உள்ளது. இந்த 10 நாட்களில் 1,212 பேர் குணம் அடைந்தும் சென்று உள்ளனர். அப்படி என்றால் கொரோனா பரவல் வேகம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல், சானிடைசர் அல்லது சோப்பு போட்டு கைகளை சுத்தம் செய்வதில் பொதுமக்கள் அலட்சியம் காட்டக்கூடாது.

    போலீசார் அபராதம் விதித்து விடுவார்கள் என்று பயந்து அச்சத்தில் முகக்கவசங்கள் அணியாமல், உண்மையாக நமக்கும், நம்மால் இன்னொருவருக்கும் கொரோனா பரவல் ஏற்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்துடன் முகக்கவசம் அணிய வேண்டும்.

    இதுபோல் தடுப்பூசி போடுவதில் அரசு அதிக அக்கறை செலுத்தி வருகிறது. அதே நேரம் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன. இதுபற்றிய உண்மை நிலையை அரசும், மருத்துவத்துறையும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அரசுக்கு மட்டுமின்றி மக்களுக்கும் பெரும் பங்கு உள்ளது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.
    Next Story
    ×