என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    குடியாத்தத்தில் கொரோனாவுக்கு மனைவி பலியான அதிர்ச்சியில் வேலூர் பஸ் ஊழியர் பலி

    குடியாத்தத்தில் கொரோனாவுக்கு மனைவி பலியான அதிர்ச்சியில் கணவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    குடியாத்தம்:

    குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 51). வேலூரில் உள்ள தனியார் பஸ் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    இவருடைய மனைவி லதா (49). இவருக்குகடந்த 21-ந்தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து லதா அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனை கேட்டு கார்த்திகேயன் அதிர்ச்சி அடைந்தார்.இதனால் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    அவர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் பொதுவார்டில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் லதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    அவரது உடலை கொரோனா விதிமுறைப்படி வேலூரில் அடக்கம் செய்தனர். மனைவி இறந்த அதிர்ச்சியில் கார்த்திகேயன் உடல் நிலை மேலும் மோசமானது. அவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    Next Story
    ×