search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புடம்
    X
    கோப்புடம்

    கல்லூரி மாணவியை கட்டையால் தாக்கி கொலை செய்த காதலன் - திடுக்கிடும் தகவல்கள்

    திருக்கனூர் அருகே கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    திருக்கனூர்:

    புதுவை திருக்கனூரை அடுத்துள்ள சந்தை புதுக்குப்பம் காலனியை சேர்ந்தவர் ராமன். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

    இவரது மகள் ராஜஸ்ரீ (17). இவர் சேதராப்பட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இவர் நேற்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்று வருவதாக தனது தாயிடம் கூறி சென்றார்.

    கல்லூரி முடிந்து மதியம் 3 மணியளவில் ராஜஸ்ரீ போன் மூலம் தனது தாயிடம் தொடர்பு கொண்டு பேசியதாக கூறப்படுகிறது.

    ஆனால், அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இரவு வெகுநேரமாகியும் ராஜஸ்ரீ வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜஸ்ரீயை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் வில்லியனூர் அடுத்துள்ள பொறையூர் பேட் பகுதியில் உள்ள சுடுகாட்டில் மர்மமான முறையில் சாக்கு மூட்டை கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன், வில்லியனூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    சாக்கு மூட்டையை பிரித்து பார்த்த போது அதில் மாணவி ராஜஸ்ரீ பிணம் இருந்தது. உடலை போலீசார் கைப்பற்றி கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் மாணவி கொலை செய்யப்பட்டது குறித்து திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அதன் விவரம் வருமாறு:-

    ராஜஸ்ரீ மேட்டுப்பாளையம் அரசு பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் போது பொறையூர் காலனியை சேர்ந்த பிரதீஷ் (18) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

    ராஜஸ்ரீயை பிரதீஷ் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே ராஜஸ்ரீ வேறு ஒரு வாலிபரை காதலித்து வருவதாக ஏற்கனவே காதலித்து வந்த பிரதீசுக்கு சந்தேகம் எழுந்தது.

    இதையடுத்து சந்தேகத்தை தீர்க்க அந்த வாலிபர் நேற்று ராஜஸ்ரீயை போனில் தொடர்பு கொண்டு அழைத்தார்.

    இதனை ஏற்று ராஜஸ்ரீ நேற்று மாலை பொறையூர் காலனிக்கு சென்றுள்ளார். ராஜஸ்ரீயை பிரதீஷ் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு அங்குள்ள சுடுகாட்டுக்கு சென்றுள்ளார்.

    அப்போது ராஜஸ்ரீயிடம் என்னை கைவிட்டு விட்டு வேறு ஒரு வாலிபரை காதலிக்கிறாயா? என கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில், இருவருக்கும் வாக்குவாதம் முற்றி உள்ளது.

    அப்போது ஆத்திரம் அடைந்த பிரதீஷ் அங்கு கிடந்த சவுக்கு கட்டையால் ராஜஸ்ரீயை தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் உடலை சாக்கு மூட்டையில் கட்டி வீசி சென்றது விசாரணையில் தெரிய வந்தது.

    இதையடுத்து பிரதீசை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த வாலிபருடன் அவரது நண்பர்களும் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

    இது தொடர்பாக பிரதீசிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    Next Story
    ×