search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி
    X
    கொரோனா தடுப்பூசி

    திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் 3-ம் நாளாக தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடால் மக்கள் ஏமாற்றம்

    திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில் 3-ம் நாளாக இன்றும் தடுப்பூசி தட்டுப்பாடால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், மினி கிளினிக்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆரம்ப காலங்களில் அச்சம் காரணமாக மக்கள் குறைவாகவே தடுப்பூசி போட வந்தனர். தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் தொற்று வேகமாக பரவி வருவதால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    ஆனால் பெரும்பாலான மையங்களில் தடுப்பூசி நேற்று முன்தினமே முடிந்துவிட்டது. நத்தம், பழனி, வேடசந்தூர் திண்டுக்கல் புறநகர் பகுதிகளில் உள்ள தடுப்பூசி மையங்களில் ஊசி இல்லாததால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

    மற்ற மையங்களிலும் குறைந்த அளவு தடுப்பூசிகளே இருப்பதால் அவையும் அடுத்து வரும் நாட்களில் முடிந்துவிடும் என மருத்துவத்துறையினர் தெரிவிக்கின்றனர். வேடசந்தூர் பகுதியில் தனியார் மில்களில் வேலை பார்ப்பவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே பணிக்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்படுவதால் அவர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே முதல்கட்ட தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும், 2-வது தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாத நிலையில் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    கொடைக்கானல் தாலுகா அளவில் இதுவரை 15ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி இல்லாததால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மலைகிராம மக்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் தடுப்பூசி போட வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். அப்சர்வேட்டரி, சுகாதார மையத்திலும் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டு விட்டது.

    மேலும் அரசு ஆஸ்பத்திரி, கொடைக்கானல் நகர்புற ஆரம்ப சுகாதார மையத்திலும் குறைந்த அளவு தடுப்பூசிகளே உள்ளதால் முதல் தவணையாக தடுப்பூசி யாருக்கும் செலுத்தப்படவில்லை. கொசவபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தடுப்பூசி இல்லாததால் அந்த மையம் வெறிச்சோடி காணப்படுகிறது. சின்னாளபட்டி மற்றும் பழனி, பாப்பம்பட்டி பகுதிகளிலும் தடுப்பூசி போடும் பணி இன்று 3-வது நாளாக நிறுத்தப்பட்டது.

    தேனி மாவட்டத்தில் பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் குறைந்த அளவு தடுப்பூசிகளே உள்ளது. இதனால் அங்கு வந்த பொதுமக்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு மருத்துவ ஊழியர்கள் தெரிவித்தனர். அருகில் உள்ள மையங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று வந்த மக்கள் நீண்டதூரம் செல்லவேண்டும் என்பதால் அவர்களும் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர். போடி அரசு ஆஸ்பத்திரியில் டொம்புசேரியில் இருந்து மருத்துவ ஊழியர்கள் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர்.

    இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தடுப்பூசி போடும் பணியாளர்கள் வரவில்லை. இதனால் அந்த மையம் மூடப்பட்டது. தடுப்பூசி செலுத்த வந்த மக்கள் திரும்பிச்சென்றனர். பெரும்பாலான மையங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக மக்கள் ஆர்வமுடன் வந்தபோதும் அவர்களுக்கு ஊசி போடமுடியவில்லை என்று தெரிவித்தனர்.

    Next Story
    ×