search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    முடிந்தால் பிடித்துப்பார்- போலீசாருக்கு சவால் விட்ட பிரபல ரவுடி கைது

    முடிந்தால் பிடித்துப்பார் என்று சவால் விடுத்த ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்.

    பழனி:

    பழனி அருகே உள்ள பாலசமுத்திரத்தைச் சேர்ந்தவர் மயில்சாமி. தேங்காய் வியாபாரியான இவரை கடந்த வருடம் நவம்பர் மாதம் 7-ந்தேதி ஒரு கும்பல் கடத்திச் சென்றது. பின்னர் வீட்டில் இருந்து ரூ.10 லட்சம் வாங்கி வருமாறு மிரட்டினர்.

    இதனையடுத்து மயில்சாமி கூறியதாக அவரது வீட்டுக்கு சென்ற 2 பேர் ரூ.10 லட்சத்தை வாங்கிக் கொண்டு அதன் பிறகு அவரை வேடசந்தூர் ரோட்டில் இறக்கி விட்டு சென்று விட்டனர். மறுநாள் காலையில் மயில்சாமி வீட்டுக்கு வந்து நடந்த விபரங்களை தனது மனைவியிடம் கூறினார்.

    மேலும் இது குறித்து பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தலில் தொடர்புடைய 5 பேர்களை கைது செய்தனர். முக்கிய குற்றவாளியாக பழனியைச் சேர்ந்த பூபாலன் (31) என்பவரை தேடி வந்தனர். இவர் மீது பல்வேறு அடிதடி வழக்குகள், கொலை முயற்சி வழக்குகள் உள்ளன.

    பூபாலனை போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்த போதும் அவர் தன் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே வந்தார். இந்த நிலையில் தன்னை யாரும் பிடிக்கமுடியாது. முடிந்தால் தன்னை பிடித்து பார்க்கட்டும் என்று போலீசாருக்கு சவால் விடும் வகையில் பூபாலன் பேசிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியானது. இந்நிலையில் கோவையில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பழனி டி.எஸ்.பி. சிவா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி ராஜா மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர்.

    ஆனால் அங்கிருந்தும் பூபாலன் தப்பி கொடைக்கானல் சாலையில் பதுங்கி இருந்தார். அந்த இடத்துக்கு சென்ற போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். பூபாலன் வேறு ஏதேனும் வழக்குகளில் சம்மந்தப்பட்டுள்ளாரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×