search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல் மூட்டைகளை பாதுகாக்க வலியுறுத்தி சேற்றில் உருண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
    X
    நெல் மூட்டைகளை பாதுகாக்க வலியுறுத்தி சேற்றில் உருண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

    நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்- சேற்றில் உருண்டு விவசாயிகள் நூதன போராட்டம்

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 21 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தலா 200 நெல் மூட்டைகள் என்ற அடிப்படையில் கொள்முதல் செய்யப்படுகிறது.
    செய்யாறு:

    செய்யாறு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் கடந்த வாரம் பெய்த கோடை மழையில் அங்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானது. இதனால் விவசாயிகள் விரக்தியடைந்தனர்.

    இந்த நிலையில் நெல்மூட்டைகளை பாதுகாக்க தவறிய ஒழுங்குமுறை விற்பனை கூடங்களின் நிர்வாகத்தை கண்டித்து செய்யாறு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தார்பாயை உயர்த்தி பிடித்து கொண்டும், தேங்கி இருந்த மழை நீரில் உருண்டு புரண்டும் விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதையடுத்து, கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

    போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார்.

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி, ஆரணி, சேத்துப்பட்டு வட்டங்களில் நவரை சாகுபடி அறுவடை நடைபெறுகிறது.

    80 ஆயிரம் மூட்டைகள் அறுவடை செய்யப்பட்டு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், நேரடி நெல் கொள்முதல் நிலையம், தனியார் கமிட்டிகளில் விவசாயிகள் விற்பனை செய்ய கொண்டு செல்கின்றனர்.

    செய்யாறு, சேத்துப்பட்டு, வந்தவாசி மற்றும் ஆரணி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் தினசரி 15 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. வரத்து அதிகம் இருப்பதால், 30 ஆயிரம் நெல் மூட்டைகள் திறந்தவெளியில் குவிந்து கிடக்கிறது. எனவே, எடை பணியாளர் மற்றும் எடை போடுவதற்கான உபகரணங்களை வெளியூர்களில் இருந்து வரவழைத்து, எடை போடும் பணியை அதிகரிக்க வேண்டும். மேலும், வெளியூர் வியாபாரிகளை அனுமதித்து, நெல் மூட்டைகள் கொள்முதல் செய்வதையும் அதிகரிக்க வேண்டும். 15 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் என்பதை, 30 ஆயிரமாக உயர்த்த வேண்டும்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 21 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தலா 200 நெல் மூட்டைகள் என்ற அடிப்படையில் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனை, 600 மூட்டைகளாக அதிகரிக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நிரந்தர கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும்.

    நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு நெல் மூட்டைகளை பாதுகாக்க தார்பாய்கள் வழங்க வேண்டும். செய்யாறு மற்றும் வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கட்டப்பட்டுள்ள தலா ஆயிரம் டன் கொள்ளளவு உள்ள 2 கிடங்குகளை உடனடியாக திறக்க வேண்டும் என்றனர்.


    Next Story
    ×