என் மலர்
செய்திகள்

நிலக்கடலை
செம்பனார்கோவில் பகுதியில் நிலக்கடலைக்கு அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை
செம்பனார்கோவில் ஒன்றிய பகுதிகளில் நிலக்கடலைக்கு அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கைகள் விடுத்துள்ளனர்.
பொறையாறு:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா பகுதியில் விவசாய தொழிலும், மீன்பிடி தொழிலும் பிரதான தொழிலாக நடைபெற்று வருகிறது. விவசாயிகள் நெல், பருத்தி, உளுந்து உள்ளிட்ட பயறு வகைகளும், செங்கரும்பு, சீனி கரும்பு, வாழை நிலக்கடலை, மக்காச்சோளம், கம்பு, மரவள்ளிகிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பனங்கிழங்கு, பாகற்காய், புடலங்காய், பீர்க்கங்காய் சுரைக்காய், மிளகாய், கத்தரிக்காய் உள்ளிட்டவைகளையும் சாகுபடி செய்து வருகின்றனர். பொறையாறு அருகே காழியப்பநல்லூர், ஆணைகோயில் மற்றும் செம்பனர்கோவில் ஒன்றிய பகுதிகளில் நிலக்கடலை சாகுபடி செய்து வருகின்றனர். கார்த்திகை, ஆடி, சித்திரை ஆகிய 3 பட்டங்களாக பிரித்து சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்து வருகின்றனர்.
இதுகுறித்து முன்னோடி விவசாயிகள் பிரபாகரன், சேகர் ஆகியோர் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
நிலக்கடலையை மதுரை, சிவகாசி கன்னியாகுமரி, நாகர்கோவில், உசிலம்பட்டி, திருநெல்வேலி, பகுதியை சேர்ந்த கடலை மிட்டாய் குடிசை தொழிலாக செய்யும் சிறு, குறு வியாபாரிகள் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றிய பகுதிக்கு வந்து நிலக்கடலையை தரம் பிரித்து கொள்முதல் செய்கின்றனர். அப்போது நிலக்கடலைக்கு தரத்துக்கு ஏற்ப குறைந்த விலையை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்வதால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
நிலக்கடலை சாகுபடி செலவு, ஆட்கள் கூலி உள்ளிட்ட செலவுக்கு தான் சரியாக உள்ளது. லாபம் கிடைப்பது இல்லை. எனவே செம்பனார்கோவில் ஒன்றிய பகுதிகளில் நிலக்கடலைக்கு அரசு நேரடி கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். நிலக்கடலைக்கான விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Next Story






