search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்குதல்
    X
    மின்சாரம் தாக்குதல்

    வீடு கிரகபிரவேசத்துக்கு மா இலை பறித்த வாலிபர் மின்சாரம் தாக்கி பலி

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் மேல்நிலை குடிநீர் தொட்டியில் ஏறி வீடு கிரகபிரவேசத்துக்கு மா இலை பறித்த வாலிபர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி புதூர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு சவுந்தர்யா என்ற மகளும், கோபாலகிருஷ்ணன் (27) என்ற மகனும் உள்ளனர்.

    கோபாலகிருஷ்ணன் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இன்னும் திருமணம் ஆகவில்லை. கோபால கிருஷ்ணன் புதிதாக வீடு கட்டி உள்ளார்.

    வீடு கிரக பிரவேசத்துக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக உறவினர்கள், நண்பர்களை அழைத்திருந்தார்.

    வீடு கிரக பிரவேச பூஜைக்காக மா இலை தேவைப்பட்டது. இதையடுத்து கோபாலகிருஷ்ணன் தனது வீட்டின் அருகே உள்ள ஒரு குடிநீர் மேல்நிலைத் தொட்டி மீது ஏறி அருகில் இருந்த மா மரத்தில் மா இலைகளை பறித்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக மேலே சென்ற உயர்அழுத்த மின்கம்பியில் அவரது கை மோதியது. இதில் மின்சாரம் தாக்கி கோபாலகிருஷ்ணன் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்குள் தூக்கி வீசப்பட்டு பலியானார்.

    சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் ஓடி வந்தனர். அப்போது சிலர் மேலே சென்று பார்த்தபோது தண்ணீர் தொட்டியில் கோபாலகிருஷ்ணன் இறந்த நிலையில் கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் விரைந்து வந்து மேல்நிலைத் தொட்டியில் இருந்து கோபாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கவுந்தப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    புதுவீடு கிரக பிரவேசத்தன்று கோபாலகிருஷ்ணன் மின்சாரம் தாக்கி இறந்ததால் அவரது வீடே சோகத்தில் மூழ்கியது. ஒரே மகனை இழந்த துக்கத்தில் பெற்றோர் கதறி அழுதனர்.
    Next Story
    ×