search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காட்சி.
    X
    கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்ற காட்சி.

    கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்

    சென்னிமலை அருகே கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சென்னிமலை:

    கீழ்பவானி பிரதான கால்வாய், காலிங்கராயன் மற்றும் தடப்பள்ளி - அரக்கன்கோட்டை கால்வாய்களை நவீனப்படுத்தும் வகையில் நபார்டு வங்கி மூலம் ரூ.933 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் மட்டும் ரூ.740 கோடி மதிப்பில் கான்கிரீட் தளம் அமைக்கப்படுகிறது.

    நேற்று முன்தினம் கோவை வந்த பிரதமர் மோடி கீழ்பவானி பாசன திட்ட விரிவாக்க பணியை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை நிறைவேற்றினால் வாய்க்காலை ஒட்டியுள்ள பகுதிகளில் நீர் செறிவூட்டுவது நின்று விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். மேலும் வறட்சியும் ஏற்படும் என கீழ்பவானி பாசன பகுதி விவசாயிகள் தொடர்ந்து இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்த திட்டத்தை தமிழக அரசு ரத்து செய்யக்கோரி சென்னிமலையில் கடந்த 12-ந் தேதி ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. மேலும் விவசாயிகள் தொடர் போராட்டத்தையும் அறிவித்தனர். அதன்படி நேற்று சென்னிமலை அருகே தலவுமலை என்ற இடத்தில் செல்லும் கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு முருங்கத்தொழுவு ஊராட்சி தலைவர் மு.ரவி தலைமை தாங்கினார். தமிழக விவசாயிகள் சங்க செயலாளர் செங்கோட்டையன், இயற்கை வாழ்வுரிமை அமைப்பாளர் கு.பொடாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் காலி குடங்களை கையில் ஏந்தி "அமைக்காதே அமைக்காதே கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்காதே" "வெட்டாதே வெட்டாதே வாய்க்கால் பகுதியில் உள்ள மரங்களை வெட்டாதே" என கோஷங்கள் எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் திருப்பூர் மாவட்ட பகுதியில் இருந்தும் விவசாயிகள் கலந்து கொண்டனர். இன்று (சனிக்கிழமை) சென்னிமலை அருகே அய்யம்பாளையம் பகுதியிலும், நாளை (ஞாயிற்றுக்கிழமை), திருப்பூர் மாவட்டம் வள்ளியரச்சல் பகுதியிலும், நாளை மறுநாள் (திங்கட்கிழமை) திட்டம்பாளையத்திலும், 2-ந் தேதி பெருந்துறை அருகே நல்லாம்பட்டியிலும் உள்ள வாய்க்கால் பகுதிகளில் காலை 7 மணிக்கு தொடர் போராட்டங்களை நடத்துவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×