என் மலர்
செய்திகள்

வெண்ணாறு, வெட்டாறு படுகையில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும்- ஊராட்சி தலைவர்கள் போலீசில் புகார்
மெலட்டூர்:
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட காவலூர் தோட்டம், கோவத்தகுடி, கொத்தங்குடி, எடவாக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வெண்ணாற்று மற்றும் வெட்டாறு படுகையில் சட்ட விரோதமாக மணல் குவாரி அமைத்து இரவு பகலாக எல்லா நேரங்களில் ஏராளமான லாரிகள் மூலம் மணல் எடுத்து செல்கின்றனர்.
அதனால் கிராமங்களில் உள்ள சாலைகள் சேதமடைந்து வருவதோடு அதிவேகமாக செல்லும் லாரிகளால் விபத்து ஏற்படும் அச்சத்தில் கிராமமக்கள் உள்ளனர். இதையடுத்து மணல் கொள்ளையை தடுக்க வலியுறுத்தி மெலட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.
அதில், வெட்டாற்றில் காவலூர் தோட்டம் பகுதியிலும், வெண்ணாற்று படுகையில் காந்தாவனம், கோவத்தகுடி, உதாரமங்களம் பகுதியில் மணல் குவாரி அமைத்து கடந்த சில நாட்களாக தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வருவதால் காந்தாவனம், உதாரமங்களம் தோட்டம் மற்றும் கோவத்தகுடி பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படுவதோடு, புதியதாக போடப்பட்ட சாலைகள் சேதமடைந்து வருகிறது.
மேலும் குடிநீர் ஆதாரங்கள் நீர்மட்டம் வெகுவாக குறைந்து மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
ஊராட்சி மன்ற தலைவர்கள் கொத்தங்குடி பழனி, கோவத்தகுடி கருப்பையன், எடவாக்குடி விஜயகுமார், பெருமாக்க நல்லூர் ராமநாதன், ஒன்றிய கவுன்சிலர் வள்ளி விவேகானந்தன், நகர தி.மு.க. செயலர் சீனு உள்பட பலர் உடன் இருந்தனர்.