search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நந்தகுமார், மைதிலி ஆகியோர் திருமணத்தின்போது எடுத்த படம்.
    X
    நந்தகுமார், மைதிலி ஆகியோர் திருமணத்தின்போது எடுத்த படம்.

    அந்தியூர் அருகே செக்ஸ் தொல்லை கொடுத்ததால் உணவில் விஷம் கலந்து கணவரை கொன்ற கர்ப்பிணி கைது

    திருமணம் ஆன 7 மாதத்திலேயே கணவருக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து மனைவி கொலை செய்த சம்பவம் அந்தியூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு:

    அந்தியூர் அருகே திருமணமான 7 மாதத்தில் கணவருக்கு உணவில் விஷம் கலந்து கொன்ற கர்ப்பிணியை போலீசார் கைது செய்தனர். செக்ஸ் தொல்லை கொடுத்ததால் ஆத்திரத்தில் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்து உள்ளது.

    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள காளியண்ணன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து. இவருடைய மகன் நந்தகுமார் (வயது 35). விவசாயி.

    இவருக்கும், பவானி அருகே உள்ள பெரியமோளபாளையத்தை சேர்ந்த ஆனந்தன் என்பரின் மகள் மைதிலிக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரும் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி நந்தகுமார் தன்னுடைய தோட்டத்தில் பயிருக்கு மருந்து தெளித்துவிட்டு வீட்டுக்கு வந்து சாப்பிட்டு உள்ளார். அப்போது உணவு கசந்ததால் அதை கீழே கொட்டிவிட்டு கூலி வேலைக்கு சென்றுவிட்டார். அங்கு மதியம் தான் கொண்டு வந்த உணவை சாப்பிட்டு உள்ளார். அந்த உணவும் கசந்ததால், அதையும் கீழே கொட்டினார்.

    இதற்கிடையே அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் அவர் கடந்த 31-ந் தேதி அந்தியூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கடந்த 15-ந் தேதி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அந்தியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் நந்தகுமாருக்கு உணவில் விஷம் கலந்து கொன்றதாக அவருடைய மனைவி மைதிலி அந்தியூர் கிராம நிர்வாக அதிகாரி முருகானந்தத்திடம் சரண் அடைந்தார். உடனே மைதிலியை கிராம நிர்வாக அதிகாரி அந்தியூர் போலீசில் ஒப்படைத்தார்.

    இதைத்தொடர்ந்து மைதிலியிடம் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி விசாரணை நடத்தினார்.

    விசாரணையில், ‘நந்தகுமாருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி உள்ளது. ஆனால் திருமணம் ஆன 4 மாதத்திலேயே நந்தகுமாரை விட்டு அவருடைய மனைவி பிரிந்து சென்றுவிட்டார். மேலும் கணவன், மனைவி விவாகரத்து பெற்றதாகவும் தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மைதிலியை 2-வதாக நந்தகுமார் திருமணம் முடித்தார். தொடக்கத்தில் நந்தகுமாருக்கு குடும்பம் நடத்துவதில் ஆர்வம் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் அந்தியூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிகிறது. இதைத்தொடர்ந்து அவருடைய மனைவி மைதிலி கர்ப்பம் அடைந்தார்.

    ஆஸ்பத்திரியில் பெற்ற சிகிச்சைக்கு பின்னர், மைதிலிக்கு நந்தகுமார் அடிக்கடி செக்ஸ் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. தன்னால் இந்த செக்ஸ் தொல்லையை தாங்க முடியவில்லை என நந்தகுமாரிடம் மைதிலி தெரிவித்து உள்ளார். எனினும் நந்தகுமார் அதை காது கொடுத்து கேட்கவில்லை என தெரிகிறது.

    ஒரு கட்டத்தில் நந்தகுமாரின் செக்ஸ் தொல்லை அதிகமாகவே அவர் மீது மைதிலிக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதனால் சாப்பாட்டில் விஷம் கலந்து கணவரை கொன்றது,’ தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மைதிலியை போலீசார் கைது செய்தனர். தற்போது மைதிலி 5 மாதம் கர்ப்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×