search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகர்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. பேசிய போது எடுத்த படம்.
    X
    நாகர்கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. பேசிய போது எடுத்த படம்.

    தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் பாதுகாப்பு அரணாக இருப்பது தி.மு.க.தான் - சுரே‌‌ஷ்ராஜன் எம்.எல்.ஏ. பேச்சு

    தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் பாதுகாப்பு அரணாக இருப்பது தி.மு.க. தான் என்று நாகர்கோவிலில் நடந்த வீரவணக்கநாள் பொதுக்கூட்டத்தில் சுரே‌‌ஷ்ராஜன் எம்.எல்.ஏ. கூறினார்.
    நாகர்கோவில்:

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நேற்று மாலை நாகர்கோவில் செம்மாங்குடி ரோட்டில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சதாசிவன் தலைமை தாங்கினார். மாநகர மாணவர் அணி அமைப்பாளர் முருகப்பெருமாள் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் சுரே‌‌ஷ்ராஜன் எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ம.உமாபதி, உடுமலை தண்டபாணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

    சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. பேசும் போது கூறியதாவது:-

    தமிழ் மொழிக்காக உயிர் தியாகம் செய்த தலைவர்கள் மற்றும் தியாகிகளை நினைவு கூறும் வகையில் இந்த வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு இனத்தை அழிக்க முதலில் மொழியை அழிக்க வேண்டும் என்பதை மத்திய அரசு நன்கு தெரிந்து வைத்துள்ளது. அதன் அடிப்படையில் இந்தி திணிப்பை தமிழகத்தில் கொண்டு வருகிறது. பெரியார் பிறந்த மண்ணில் மொழி அழிப்புக்கு இடம் இல்லை.

    தமிழுக்கும், தமிழர்களுக்கும் பாதுகாப்பு அரணாக எப்போதும் இருப்பது தி.மு.க. தான். மத்திய அரசு கொண்டு வரும் வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தும், அதனை பொருட்படுத்தாமல் இருப்பது சர்வாதிகாரத்தை காட்டுகிறது.

    ரெயில் நிலையங்கள், வங்கிகள் என எங்கு பார்த்தாலும் இந்தி மொழியை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. இந்தி மொழியை கற்பதற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தமிழை அழித்து இந்தியை திணிக்கும் முயற்சியை தான் தி.மு.க. எதிர்க்கிறது.

    தமிழக மக்களின் உணர்வை புரிந்து கொண்ட, மக்களுக்கான ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் முன்னாள் எம்.பி. ஹெலன்டேவிட்சன், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் தாமரைபாரதி மற்றும் நிர்வாகிகள் வக்கீல் உதயகுமார், கேட்சன், தில்லைசெல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை அமைப்பாளர் ஆன்றனி ராஜ் நன்றி கூறினார்.
    Next Story
    ×