
தமிழக சட்டசபை தேர்தல் 2021
ஆம்பூர்:
திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம் ஆம்பூரில் நடந்தது. கூட்டத்திற்கு ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் எஸ்.டி.நிசார் அகமது தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான அபு பக்கர் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை முழுவதுமாக புறக்கணிக்கப் போவதாக முடிவு செய்து இருக்கின்றோம்.
மத்திய பா.ஜ.க.வை எதிர்த்தும், தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவதற்கும் முழுமனதோடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள், முஸ்லிம் சமுதாயத்தில் உரிய அனைத்து ஜமாத்தினர்களும் பாடுபடுவோம் என்ற தீர்மானத்தையும் இந்த கூட்டத்தில் நிறைவேற்றி இருக்கின்றோம்.
மேலும் 10 மாவட்டங்களை உள்ளடக்கிய வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கிய அரசியல் விழிப்புணர்வு மாநாடு ஆம்பூரில் நடைபெறுகிறது.
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி தொகுதிகளை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். தொகுதிப் பங்கீடு குறித்து பேச கட்சியில் விரைவில் குழு அமைக்கப்படும்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவதற்கு நாங்கள் முழு மனதோடு பாடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.