என் மலர்tooltip icon

    செய்திகள்

    யானை
    X
    யானை

    பந்தலூரில் தந்தை- மகனை அடித்துக்கொன்ற யானையை பிடிக்க 3 கும்கிகள் வரவழைப்பு

    தந்தை- மகனை அடித்துக்கொன்ற ஆட்கொல்லி யானையை பிடிக்க கும்கி யானைகளை பயன்படுத்த வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் சேரம்பாடி வனச்சரகம் கொளப்பள்ளி சரகம் 5 ஆனைப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் கண்ணா என்ற ஆனந்தராஜ் (வயது 40). கூடலூர் யூனியன் தி.மு.க. கவுன்சிலர்.

    இவரது மகன் பிரசாந்த் (20). இவர் நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து வீடு திரும்பியபோது காட்டு யானை தாக்கி பலியானார். மகன் பலியான தகவல் கேட்டு கதறி துடித்து அவரது உடலை பார்க்க கண்ணா ஓடிச்சென்றார். இரவு நேரத்தில் ஆக்ரோ‌ஷமாக திரிந்த அதே காட்டுயானை கண்ணாவையும் அடித்துக் கொன்றது.

    தந்தை- மகன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள், பலியான தந்தை- மகன் உடலை எடுக்க விட மாட்டோம் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பந்தலூர் மெயின் ரோட்டில் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். அந்த பகுதி முழுவதும் கடைகளும் அடைக்கப்பட்டன.

    கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 6 பேரை காட்டுயானை தாக்கி கொன்றுள்ளது. இதற்கு நிரந்தர முடிவு காணவேண்டும். உயிரிழந்த குடும்பத்தினருக்கு இழப்பீடு, அரசு வேலை வழங்கவேண்டும். உயிர் பலிவாங்கும் காட்டுயானையை பிடிக்க கும்கிகளை வரவழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் போலீசாரும், அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் மற்றும் முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட்சம் வழங்குவது, தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்குவது, மின்வேலி அமைக்க ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும், காட்டு யானைகளின் நடமாட்டம் தனிக்குழு கொண்டு கண்காணிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

    அதனை ஏற்று பொதுமக்கள் 8½ மணி நேரமாக நடத்தி வந்த போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    கவுன்சிலர் மற்றும் அவரது மகனை அடித்துக் கொன்ற ஆட்கொல்லி யானையை பிடிக்க கும்கி யானைகளை பயன்படுத்த வனத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி முதுமலை புலிகள் காப்பக வளர்ப்பு யானை முகாமில் இருந்து கும்கிகள் வசிம், பொம்மன் ஆகியவைகள் லாரி மூலம் வரவழைக்கப்பட்டது. மேலும் டாப்சிலிப் யானைகள் வளர்ப்பு முகாமில் இருந்து கும்கி கலீம் யானையும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    அட்டகாசம் செய்த காட்டுயானையை வனத்துறை டாக்டர் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்திய பின்னர் மயங்கும் யானையை 3 கும்கிகளை கொண்டு வாகனத்தில் ஏற்றி முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமுக்கு கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதனால் அந்த பகுதி மக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

    Next Story
    ×