என் மலர்
செய்திகள்

யானைகள்
மழவன்சேரம்பாடி அருகே காட்டு யானைகள் அட்டகாசம்
மழவன்சேரம்பாடி, கோட்டப்பாடி, தட்டாம்பாறை, கருத்தாடு உள்பட வனப்பகுதியையொட்டியுள்ள பல பகுதிகளுக்குள் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
பந்தலூர்:
பந்தலூர் தாலுகா மழவன்சேரம்பாடி அருகே சாமியார்மலை அடிவார வனப்பகுதியில் 15-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த காட்டு யானைகள் பல பிரிவுகளாக பிரிந்து மழவன்சேரம்பாடி, கோட்டப்பாடி, தட்டாம்பாறை, கருத்தாடு உள்பட வனப்பகுதியையொட்டியுள்ள பல பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. விவசாய தோட்டங்களில் உள்ள வாழை, தென்னை, பாக்கு மரம் மற்றும் காய்கறி பயிர்களை மிதித்தும், தின்றும் காட்டு யானைகள் நாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மழவன்சேரம்பாடி பகுதிக்குள் நுழைந்த காட்டுயானைகள் பொதுமக்கள் குடியிருப்புகளை முற்றுகையிட்டன. பின்னர் அங்கிருந்து சென்ற காட்டு யானைகள் தோட்டங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களையும் சேதப்படுத்தியன. இதில், காட்டுயானைகள் கிருஷ்ணசாமி என்பவரின் வீட்டின் அருகே நின்ற பாக்குமரங்களை முட்டி தள்ளியதில், மரம் வீட்டின் மேல் இருந்த சோலார் மின்சார உபகரணங்கள் மீது விழுந்தது. இதனால் மின்உபகரண பொருட்கள் சேதம்அடைந்தது. பின்னர் பொதுமக்கள் சத்தம்போட்டு காட்டுயானைகளை விரட்டினர். இந்த சம்பவம் குறித்து அறிந்த சேரம்பாடி வனச்சரகர் சின்னத்தம்பி மற்றும் வனத்துறையினர் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story






