search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருவட்டார் அருகே வியாபாரியை தாக்கி ரூ.70 ஆயிரம் பறிப்பு

    திருவட்டார் அருகே விற்பனைக்கு மாடு இருப்பதாக வரவழைத்து வியாபாரியை தாக்கி ரூ.70 ஆயிரம் பறித்து மர்மநபர்கள் துணிகர கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர்.
    திருவட்டார்:

    திருவட்டார் அருகே மூவாற்றுமுகம் பகுதியை சேர்ந்தவர் மோகன் ராஜ் (வயது 38). மாடு வாங்கி விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வருகிறார். வியாபாரம் சம்பந்தமாக பல்வேறு இடங்களுக்கு சென்று வருவார்.

    நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ‘மாத்தூர் தொட்டிப்பாலம் பகுதியில் மாடுகள் விற்பனைக்கு இருப்பதாகவும், பணத்துடன் வந்தால் வியாபாரத்தை முடித்துக் கொள்ளலாம்’ என்றும் கூறினார். இதையடுத்து மோகன்ராஜ் தனது வீட்டில் இருந்து ரூ.70 ஆயிரத்தை எடுத்து கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் மாத்தூர் தொட்டி பாலம் பகுதிக்கு சென்றார்.

    அங்கு ரப்பர் தோட்டம் பகுதியில் சென்ற போது முகத்தை துணியால் மறைத்தபடி இரண்டு பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் மோகன் ராஜை வழிமறித்து நிறுத்தி சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த ரூ.70 ஆயிரத்தை பறித்தனர். தொடர்ந்து தாக்கியபடி இருந்ததால் அவர்களது பிடியில் இருந்து மோகன்ராஜ் தப்பியோடி ஆற்றில் குதித்து நீந்தி மறுகரைக்கு சென்று தப்பினார்.

    பின்னர் ஆற்றூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இந்த சம்பவம் குறித்து திருவட்டார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப்பதிவு செய்து, மாடு வியாபாரியை தாக்கி பணம் பறித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.
    Next Story
    ×