search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அறந்தாங்கி அருகே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த பெண் பலி

    அறந்தாங்கி அருகே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள கடையாத்துப்பட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் மெய்ஞானம். துபாயில் வேலை பார்த்து வரும் இவர், தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு வந்துள்ளார். இவரது மனைவி சாத்தாயி(வயது 45). இவர்களுக்கு 2 மகள்களும், மணிகண்டன் என்ற மகனும் உள்ளனர். சாத்தாயி, நெல் விவசாயம் செய்திருந்தார். நெல்லுக்கு இன்சூரன்ஸ் செய்யச்சொல்லி மணிகண்டனிடம், சாத்தாயி கூறியுள்ளார். அதற்கு மணிகண்டன், எனக்கு ஆன்-லைன் வகுப்பு உள்ளது. 

    பிறகு செய்கிறேன் என கூறியதாக தெரிகிறது. இதுதொடர்பாக தாய்க் கும், மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோபத்தில் சாத்தாயி வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு மணிகண்டன் ஓடிச் சென்று தீயை அணைத்தார். இருந்தாலும் சாத்தாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மணிகண்டனுக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவர் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாத்தாயி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×