என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பாரூர் அருகே மாமியாரை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

    பாரூர் அருகே மாமியாரை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் அடுத்த தாமோதரஅள்ளி அருகே உள்ள குண்ணிக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சிவபிரகாசம் (வயது 31). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி முருகம்மாள்(23). இவர்களுக்குள் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவதும், இதனால் முருகம்மாள் கோபித்து கொண்டு, வடமலைபட்டி கிராமத்தில் உள்ள தனது தாய் எல்லம்மாள் வீட்டிற்கு செல்வதும் வழக்கமாக நடந்து வந்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு கணவன்-மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக முருகம்மாள் கோபித்து கொண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.

    இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 25-ந் தேதி, வடமலைப்பட்டிக்கு சென்ற சிவபிரகாசம், தனது மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த எல்லம்மாள், அவர்களை தடுத்துள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த சிவபிரகாசம், அருகில் இருந்த கொடுவாளால், எல்லம்மாளின் தலையில் வெட்டி உள்ளார். இதில் மயங்கி விழுந்த அவரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, போச்சம்பள்ளி மருத்துவமனைக்கும், பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி எல்லம்மாள் உயிரிழந்தார். இதுகுறித்து பாரூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, சிவபிரகாசத்தை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அதில், மாமியாரை கொலை செய்த குற்றத்திற்காக, சிவபிரகாசத்திற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 1,000 அபராதம் விதித்தும், அபராதம் கட்ட தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜராகி வாதாடினார்.
    Next Story
    ×