என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒலி மாசு, புகையில்லா தீபாவளி கொண்டாடுவோம் - கலெக்டர் வேண்டுகோள்
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒலி மாசு, புகையில்லா தீபாவளியை கொண்டாடுவோம் என்று கலெக்டர் கந்தசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருவண்ணாமலை:
தமிழர்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் தீபாவளி பண்டிகையும் ஒன்றாகும். தீபாவளி பண்டிகையில் விருந்து மற்றும் இனிப்புடன் சந்தோஷத்தை வெளிப்படுத்த பட்டாசு வெடிப்பது என்பது காலம், காலமாக நடந்து வருகிறது. பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் பட்டாசுகளை வெடிப்பதால் எழும் ஒலி தற்காலிக செவிட்டுத் தன்மையும், தொடர் ஓசை நிரந்தரமான செவிட்டுத் தன்மையும் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அதிக ஒலி மற்றும் ஒளியுடன் கூடிய பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசினை தடுக்கும் வகையில் பொது நல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பினை வழங்கியது. அதன்படி காலை 6 மணி முதல் காலை 7 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் தயாரிப்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தக்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது. அதன்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆண்டுதோறும் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஒலி மற்றும் காற்று மாசு குறித்தும், புகையில்லா தீபாவளி மற்றும் விபத்தில்லா தீபாவளியினை கொண்டாடுவது குறித்தும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகின்றது. எனவே காலை 6 மணி முதல் காலை 7 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. 125 டெசிபல் அளவிற்கு கீழ் ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை மட்டுமே வாங்க வேண்டும். தீபாவளி பண்டிகை குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் குடும்பத் திருவிழா. அதனால் மக்கள் அனைவரும் அவரவர் குடும்பம், நண்பர்கள் மற்றும் அண்டை அயலாருடன் பாதுகாப்பாகவும் ஒலி மற்றும் காற்று மாசற்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த தீபாவளியினைக் கொண்டாடவும். ஒலி மற்றும் காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசு வகைகளைத் தவிர்த்து வண்ண ஒளி தீபங்களால் தீபாவளியை அனைவரும் சிறப்பாகக் கொண்டாடுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






