search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    அம்பேத்கர் படத்திற்கு அவமரியாதை - விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்

    கீழ்பென்னாத்தூரில் அம்பேத்கர் படத்திற்கு அவமரியாதை செய்தவர்களை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பக்க சுற்றுச்சுவரில் முன்னாள் மாணவர்கள் சார்பில் அண்ணா, அம்பேத்கர் மற்றும் அறிஞர்கள் உருவப்படங்களை பெயிண்டால் வரைந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு யாரோ சிலர் அம்பேத்கர் படத்திற்கு அவமரியாதை செய்துள்ளனர்.

    இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பி.கா.அம்பேத்வளவன் தலைமையில், நகர செயலாளர் பிரகாஷ், பொருளாளர் சரவணன், செய்தி தொடர்பாளர் வக்கீல் சாரதி, பார்த்திபன் உள்பட பலர் திடீரென நேற்று காலை பள்ளியின் எதிரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அம்பேத்கர் படத்திற்கு அவமரியாதை செய்தவர்களை போலீசார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் போக்குவரத்து சிறிதுநேரம் பாதிக்கப்பட்டது. தகவலறிந்த கீழ்பென்னாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் தமிழரசு, ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் ஏற்படுத்தினர்.

    இதையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
    Next Story
    ×