search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    கொடைரோடு அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து 39 பவுன் நகைகள் கொள்ளை

    கொடைரோடு அருகே பட்டப்பகலில் விவசாயி வீட்டின் கதவை உடைத்து 39 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    கொடைரோடு:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள மெட்டூரை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 32). விவசாயி. இவரது மனைவி வைரமணி. இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளான். இதற்கிடையே 2-வது முறையாக கர்ப்பமான வைரமணி, பிரசவத்திற்காக நேற்று முன்தினம் சின்னாளப்பட்டி காந்திகிராம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 2-வது ஆண் குழந்தை பிறந்தது. இதைத்தொடர்ந்து மனைவி மற்றும் தனது குழந்தையை பார்ப்பதற்காக ராஜ்குமார் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு, காந்திகிராம மருத்துவமனைக்கு சென்றார்.

    இதனால் அவரது வீடு பூட்டிக்கிடப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள், இரும்பு கம்பியால் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டுக்குள் பீரோக்களில் வைத்திருந்த 39 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றனர். இதற்கிடையே மருத்துவமனையில் உள்ள மனைவி மற்றும் தனது குழந்தையை பார்த்துவிட்டு மாலையில் ராஜ்குமார் தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததுடன், பீரோக்களில் வைத்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    பின்னர் இதுகுறித்து அவர் அம்மையநாயக்கனூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவம் நடந்த வீட்டிற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது மோப்பநாய் ராஜ்குமார் வீட்டில் இருந்து சிறிது தூரம் மோப்பம் பிடித்து சென்று நின்றது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்த சம்பவம் மெட்டூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×