search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    பாலியல் வன்கொடுமை செய்ததால் சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை- தாயின் கள்ளக்காதலன் கைது

    புதுக்கோட்டையில் தூக்க மாத்திரைகள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததால் சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தாயின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை சேங்கை தோப்பு பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 32). தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கணேசனுக்கு, புதுக்கோட்டை டவுன் பகுதியை சேர்ந்த 34 வயது பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. அந்த பெண், கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். 11 வயதில் ஒரு மகள் இருந்தாள்.

    கணேசனுக்கும், அந்த பெண்ணிற்கும் ஏற்பட்ட பழக்கம் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பெண்ணின் மகளான 11 வயது சிறுமிக்கு தூக்க மாத்திரை கொடுத்து கணேசன் பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.

    இதில் மனமுடைந்த அந்த சிறுமி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கணேஷ் நகர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்தனர்.

    இதுபற்றி போலீசார் கூறுகையில், கணேசன், 11 வயது சிறுமிக்கு தூக்க மாத்திரை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தூங்கி எழுந்த பின் அந்த சிறுமி அதனை உணர்ந்ததால் தற்கொலையில் ஈடுபட்டிருக்கிறார். இதனை அந்த சிறுமியின் தாய் மறைக்க முயன்றிருக்கிறார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது என்றனர். சிறுமியின் தாத்தா கொடுத்த புகாரின் பேரில் இந்த சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் அழகம்மாள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×