search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருப்பத்தூர் அருகே டாஸ்மாக் கடையில் நடந்த வியாபாரி கொலையில் 2 பேர் கைது

    திருப்பத்தூர் அருகே டாஸ்மாக் கடையில் நடந்த வியாபாரி கொலையில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெற்குப்பை:

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கத்தில் அரசு மதுபானக்கடை உள்ளது. இந்த கடைக்கு நேற்று முன்தினம் இரவு வலையப்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது48) மற்றும் அவரது நண்பர் ஆதப்பன் (56) ஆகியோர் மது குடிக்க சென்றனர்.

    அப்போது அங்கு பட்டமங்கலத்தைச் சேர்ந்த கிட்டு (வயது23) மற்றும் காரைக்குடி சங்கராபுரத்தைச் சேர்ந்த சிவபிரகாஷ் (24) ஆகியோர் மது குடித்து கொண்டிருந்தனர். திடீரென ஆதப்பனுக்கும், சிவபிரகாசுக்கும் இடையே மோதல் உருவானது.

    வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த கிட்டுவும், சிவபிரகாசும் குடிபோதையில் அங்கு கிடந்த கம்பை எடுத்து ஆதப்பனையும், ஆறு முகத்தையும் சரமாரியாக தாக்கினர்.

    இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆதப்பன் பரிதாபமாக இறந்தார். ஆறுமுகத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிட்டு மற்றும் சிவபிரகாஷ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கிட்டு மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன.

    இந்த நிலையில் கண்டரமாணிக்கத்தில் உள்ள அரசு மதுபானக்கடையை அகற்றக்கோரியும், குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் கொலையுண்ட ஆதப்பனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரது உடலை வாங்க மறுத்து மருத்துவமனையில் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களுடன் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் குற்றவாளிகளை கைது செய்யப்பட்டு விட்டதாக போலீசார் தெரிவித்ததும் உறவினர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் உறவினர்கள் ஆதப்பனின் உடலை வாங்கி சென்றனர்.

    கொலையுண்ட ஆதப்பன் விறகு வியாபாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×