search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்டு
    X
    சென்னை ஐகோர்ட்டு

    மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு கலைஞர் கருணாநிதி பெயர் சூட்ட கோரிய வழக்கு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி

    மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு கலைஞர் கருணாநிதி பெயர் சூட்ட கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை உயர்நீதிமன்றத்தில் கலைஞர் தமிழ் பேரவையின் செயலாளர் பி.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், தமிழக முதல்வர் கடந்த ஆகஸ்ட் 1- ஆம் தேதி சென்னையில் உள்ள ஆலந்தூர், சென்ட்ரல் மற்றும் கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு பெயர் சூட்டினார். ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு 'அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம்' எனவும், சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு 'புரட்சி தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் மெட்ரோ ரெயில் நிலையம்' எனவும், கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு 'புரட்சி தலைவி டாக்டர். ஜெயலலிதா மெட்ரோ ரெயில் நிலையம்' எனவும் பெயர் சூட்டப்பட்டது.

    ஆனால், அரசியல் காரணத்துக்காக மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை சூட்டவில்லை. ஆனால், மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு மூளையாக இருந்தவரே கருணாநிதி தான். எனவே, தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு கருணாநிதியின் பெயர் சூட்ட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார்.

    இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேனாம்பேட்டை டிஎம்எஸ் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயர் சூட்டுவது குறித்து உயர்நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது என்றும் அரசு தான் முடிவெடுக்க வேண்டும் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
    Next Story
    ×