என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
குடோனில் பதுக்கிய 150 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்: தந்தை-மகன் கைது
நாகர்கோவிலில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 150 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் குடோனில் பதுக்கி வைத்திருந்த 150 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக தந்தை, மகன் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
நாகர்கோவில் மாநகராட்சியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. எனவே, இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்படி புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை ரகசியமாக தனிப்படை போலீசார் கண்காணித்தனர். இந்த நிலையில், நேற்று தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாம்சன் தலைமையில் போலீசார் கட்டயன்விளை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு அறையில் சிறு, சிறு மூடைகளில் 150 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக அங்கிருந்த 2 நபர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், நாகர்கோவில் ராமன்புதூர் விநாயகர் தெருவை சேர்ந்த ஜோசப் பெர்க்மான்ஸ் (வயது 56), இவருடைய மகன் மெர்லின் வினோ (32) என்பதும், இவர்கள் இருவரும் வீட்டை வாடகைக்கு எடுத்து குடோன் போல் அமைத்து புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து குமரி முழுவதும் விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், வடசேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, குடோனுக்கு சீல் வைத்தனர். மேலும் குடோனில் பதுக்கி வைத்திருந்த புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து தந்தை-மகன் இருவரையும் கைது செய்தனர்.
Next Story