search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதுமக்கள் தாழியை மாநில தொல்லியல் துறை இயக்குனர் உதயச்சந்திரன் பார்வையிட்டார்
    X
    முதுமக்கள் தாழியை மாநில தொல்லியல் துறை இயக்குனர் உதயச்சந்திரன் பார்வையிட்டார்

    கீழடி அகழாய்வு பணிகளை தொல்லியல் இயக்குனர் உதயச்சந்திரன் ஆய்வு

    கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகளை மாநில தொல்லியல் துறை இயக்குனர் உதயச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை கடந்த பிப்ரவரி மாதம் 19-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். தற்போது கீழடி, கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய 4 இடங்களில் அகழாய்வு நடைபெற்று வருகிறது.

    சூதுபவளம், பல வரிசை கொண்ட செங்கல் சுவர், முத்திரை அச்சு, விலங்கின முழு உருவ எலும்புக்கூடு, 300, 150 கிராம் உள்ளிட்ட 6 அளவு கொண்ட எடை கற்கள், முதுமக்கள் தாழிகள், குழந்தையின் முழு உருவ எலும்புக்கூடுகள், மனித மண்டை ஓடு, மனித முழு உருவ எலும்புக்கூடு, பளபளப்பான செவ்வண்ண பானை, தங்க நாணயம், சீன மண்பாண்ட ஓடுகள், உறைகிணறு, சங்கு வளையல்கள், சுடுமண் உலை உள்பட இதுவரை சுமார் 900 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

    இங்கு கண்டுபிடிக்கப்பட்ட மொத்த பொருட்களையும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவும், காட்சிப்படுத்தும் வகையில் கொந்தகை ஊராட்சி பகுதியில் ரூ.12¼ கோடியில் அகழ் வைப்பக கட்டிடம் அமைப்பதற்காக கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதி பூமிபூஜை நடைபெற்றது.

    இந்தநிலையில் நேற்று கீழடி பகுதியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி பணிகளை மாநில தொல்லியல்துறை இயக்குனர் உதயச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அகழ்பொருள் வைப்பக கட்டிடத்துக்கான வரைபடத்தையும் பார்வையிட்டு, கட்டிடம் அமைய உள்ள இடத்தையும் ஆய்வு செய்தார். கட்டிட பணியை உடனடியாக ஆரம்பித்து விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அதன் பின்னர் அவர் கீழடி, மணலூர், அகரம் ஆகிய இடங்களில் நடைபெறும் அகழ்வாராய்ச்சி பணிகளை பார்வையிட்டு, அங்கு கிடைத்த பொருட்கள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தார். அவருடன் மாவட்ட வருவாய் அதிகாரி லதா, திட்ட இயக்குனர் வடிவேல், மாநில தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம், சிவகங்கை கோட்டாட்சியர் முத்துக்கழுவன், தாசில்தார் மூர்த்தி, மண்டல துணை தாசில்தார் தர்மராஜ், யூனியன் ஆணையாளர் ரெத்தினவேலு, பாண்டிச்சேரி பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் ராஜன், வட்டார வளர்ச்சி அதிகாரி ஜெகநாதசுந்தரம், கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசுப்பிரமணியன், துணை தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகளும் வந்திருந்தனர்.
    Next Story
    ×