என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
கடத்தூர் பகுதியில் 100 ரூபாய் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 2 பேர் கைது
கடத்தூர் பகுதியில் 100 ரூபாய் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடத்தூர்:
தர்மபுரி மாவட்டம் கடத்தூர், தாளநத்தம் ஆகிய பகுதிகளில் கடந்த மாதம் 29-ந்தேதி மற்றும் கடந்த 3-ந்தேதி ஆகிய நாட்களில் சாலையோர கடைகளில் 100 ரூபாய் கள்ள நோட்டுகளை சிலர் புழக்கத்தில் விட்டதாக புகார் எழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்த அரூர் குற்றப்பிரிவு போலீசார் அந்த பகுதிகளில் கண்காணிப்பு பணி மேற்கொண்டு விசாரணை நடத்தினார்கள்.
இந்த விசாரணையின்போது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சின்னகாம்பட்டியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 27), ஆனந்தகுமார்(43) ஆகியோருக்கு கள்ளநோட்டு புழக்க விவகாரத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். ஜெராக்ஸ் கடை நடத்தி வந்த ராஜ்குமார் அதே பகுதியை சேர்ந்த ஆனந்தகுமாருடன் சேர்ந்து கணினி மூலம் கலர் பிரிண்டிங்கில் 100 ரூபாய் கள்ள நோட்டுகளை வடிவமைத்து ஜெராக்ஸ் எந்திரம் மூலம் அச்சடித்து இருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக அங்கு நேரில் சோதனை நடத்திய குற்றப்பிரிவு போலீசார் கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்தப்பட்ட எந்திரங்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.5 ஆயிரம் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். இதேபோல் கடத்தூர், தாளநத்தம் பகுதிகளில் புழக்கத்தில் விடப்பட்ட 100 ரூபாய் கள்ள நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமார், ஆனந்தகுமார் ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்தனர்.
Next Story