search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க. ஸ்டாலின்
    X
    மு.க. ஸ்டாலின்

    இந்தி பேசுபவர்கள் மட்டுமே இந்தியர்களா?: பா.ஜ.க. அரசின் இந்தி திணிப்பு முயற்சிக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசு அதிகாரிகள் மீதான பா.ஜ.க அரசின் இந்தி திணிப்பு முயற்சியை மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
    சென்னையில் ஜி.எஸ்.டி ஆணையர் அலுவலகத்தில் உதவி ஆணையராகப் பணியாற்றி வரும் பாலமுருகன் என்பவர் இந்தி திணிப்பு குறித்து மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கவரி வாரிய தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், “இந்தியை தாய்மொழியாக கொண்டவருக்கு இந்தி பிரிவில் பணி ஒதுக்காமல் எனக்கு திட்டமிட்டு ஒதுக்கப்படுகிறது. விருப்பம் இல்லாத ஒருவரை இந்தியை பரப்ப வேண்டும் என்று நிர்பந்திப்பதும் கூட இந்தி திணிப்பே” எனக் குறிப்பிட்டு புகார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அறிந்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், பா.ஜ.க அரசின் இந்தி திணிப்பு முயற்சியை மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவு வருமாறு:-

    மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ஆணையர் அலுவலக உதவி ஆணையர் பாலமுருகன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள குற்றச்சாட்டு, இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு உருவாகியுள்ள மாபெரும் அச்சுறுத்தலை வெளிப்படுத்துகிறது.

    இந்தி தெரியாத தனக்கு, இந்திப் பிரிவில் உதவி ஆணையர் பொறுப்பு வழங்கியதில் துளியும் விருப்பம் இல்லை என்றும், இந்திப் பிரிவில் உள்ள மூன்று அதிகாரிகளும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்றும், அலுவல் கடிதங்களும், குறிப்புகளும் இந்தியில் இருப்பதால், புரியாமல் கையெழுத்திடும் நிலை உள்ளது என்றும் அவர் கூறியிருக்கிறார்.

    பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், மதங்கள் உள்ள இந்த இந்திய நாட்டை, ஒற்றைத் தன்மை கொண்டதாக மாற்றத் துடிக்கும் பாரதீய ஜனதா கட்சியின் கபட நோக்கம் பட்டவர்த்தனமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    இந்தி பேசுபவர்கள் மட்டுமே இந்தியர்களா? இந்தியாவை, 'ஹிந்தி-யா’வாக மாற்றுவதற்கு மத்திய அரசு துடிக்கிறதா?

    இந்தி பேசும் மக்கள் தவிர மற்ற மொழியினர் அனைவரும் மாற்றாந்தாயின் பிள்ளைகளா?

    மத்திய பா.ஜ.க. அரசு ஒட்டுமொத்த இந்தியாவுக்கான மத்திய அரசா? அல்லது இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டுமே மத்திய அரசா?”

    இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
    Next Story
    ×