search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கூலிப்படை மூலம் மாமனாரை கொலை செய்ய முயற்சி - மருமகள் உள்பட 2 பேர் கைது

    செந்துறை அருகே கூலிப்படை மூலம் மாமனாரை கொலை செய்ய முயன்ற மருமகள் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள விழுப்பணங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கொளஞ்சி(வயது 56). இவரது மகன் வேல்முருகன். இவருக்கு கொளஞ்சியின் தங்கை மகள் சீதாவை(25) திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த வேல்முருகன், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து சீதா, அவரது மகன், மாமனார் கொளஞ்சி, மாமியார் ஆகியோர் ஒன்றாக வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் சீதாவிற்கு, அப்பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை கொளஞ்சி கண்டித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் வராண்டாவில் கொளஞ்சி தூங்கிக்கொண்டிருந்தார். சீதா, அவருடைய மகன் ஆகியோர் வீட்டிற்கு உள்ளே தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் மின்கம்பத்தில் இருந்து வயரில் கொக்கி மூலம் மின் இணைப்பு கொடுத்து, அதனை கொளஞ்சி மீது தூக்கி வீசி கொலை செய்ய முயன்றுள்ளனர். உடலில் மின்சாரம் பாய்ந்த அதிர்ச்சியில் அவர் கூச்சல் போட்டார்.

    சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம், பக்கத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள், 2 மர்ம நபர்களையும் விரட்டிச்சென்றனர். ஆனால் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி, 2 மர்ம நபர்களும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர். இது குறித்து கொளஞ்சி செந்துறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி, இந்த சம்பவம் தொடர்பாக கொளஞ்சியின் மருமகள் சீதா மற்றும் விழுப்பணங்குறிச்சியை சேர்ந்த பாக்கியராஜ்(38) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    இதில் சீதா, தனது மாமனார் தன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததால் பாக்கியராஜிடம் பணம் கொடுப்பதாக கூறி கொலை முயற்சியில் ஈடுபட சொன்னதாக, கூறியுள்ளார். சீதா பணம் கொடுத்து இந்த செயலை செய்ய சொன்னதாகவும், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தனது நண்பர் உதவியுடன் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், பாக்கியராஜ் கூறியுள்ளார்.

    இதைத்தொடர்ந்து 2 பேரையும் கைது செய்த செந்துறை போலீசார், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் சீதாவை திருச்சி பெண்கள் சிறையிலும், பாக்யராஜை அரியலூர் சிறையிலும் அடைத்தனர். மேலும் பாக்யராஜின் நண்பரை வலைவீசி தேடி வருகின்றனர். நகரங்களை போன்று கிராமத்திலும் சொந்த தாய்மாமன் மற்றும் மாமனாரை மருமகள் கூலிப்படை வைத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் விழுப்பணங்குறிச்சி கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×