search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமைச் செயலாளர் சண்முகம்
    X
    தலைமைச் செயலாளர் சண்முகம்

    பள்ளி, கல்லூரிகளில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களை இடமாற்றம் செய்ய வேண்டும்- தலைமைச் செயலாளர் உத்தரவு

    தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சண்முகம் கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

    வருகிற 7-ந் தேதி முதல் தமிழகத்தில் ரெயில் சேவை தொடங்கப்படும் சூழ்நிலையில் கொரோனா அதிகம் பரவாமல் தடுக்க முககவசம் அணிவதையும், சமூக இடைவெளியுடன் மக்கள் செயல்படுவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    கூட்டம் முடிந்ததும் மாவட்ட கலெக்டர்களுக்கு விரிவான கடிதமும் அனுப்பினார். அந்த கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும் தீவிரமாக பணியாற்றி இருக்கிறீர்கள்.

    பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்த மாதம் 1-ந் தேதியில் இருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் சகஜமாக பொது இடங்களுக்கு வந்து செல்வார்கள்.

    எனவே கொரோனா பரவாமல் இருக்க முககவசம் அணிவதையும், சமூக இடைவெளியுடன் நடந்து கொள்வதையும் மக்களிடையே விழிப்புணர்வை அதிகப்படுத்துவது அவசியம் ஆகும்.

    இந்த நடைமுறைகளை பின்பற்றாவிட்டால் அக்டோபர் மாதம் கொரோனா நோய் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதற்கு இடம் கொடுக்காத வகையில் அனைவரும் செயல்பட வேண்டும்.

    மக்களிடையே சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக கைகளை சுத்தமாக கழுவுவது, முககவசம் அணிவது போன்றவற்றை பொது மக்கள் பின்பற்றுகிறார்களா? என்பதை தன்னார்வலர்கள் மூலம் கண்காணிக்க வேண்டும்.

    கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் மக்களிடையே காணப்பட்டால் குறித்த நேரத்தில் பரிசோதனை செய்வது, தனிமைப்படுத்திக் கொள்வது, ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெறுவது ஆகியவை குறித்து மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

    கொரோனா தொற்று அதிகம் பரவும் வாய்ப்பு உள்ள இடங்களான மார்க் கெட், பஸ் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், வணிக நிறுவனங்கள், மீன் மார்க்கெட்டுகள், உணவகங்கள், மளிகை கடைகள் ஆகிய இடங்களில் இன்னும் அதிகமான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    வேலை பார்க்கும் இடங்களில் தேனீர் இடைவெளியின் போது கூட்டம் சேருவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். மாவட்ட நிர்வாகங்களுக்கான பணிகள் இப்போது கட்டுப்பாட்டு பகுதிகளை கண்காணிப்பது என்ற நிலைக்கு மாறி உள்ளது.

    பொது மக்கள் தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளதால் மாவட்டங்களில் தேவை ஏற்படும் பட்சத்தில் அதிக அளவு கட்டுப்பாட்டு பகுதிகளை ஏற்படுத்தலாம்.

    கொரோனா நோய் தொற்று பரிசோதனைகள், தனிமைப்படுத்துதல், சிகிச்சை மேற்கொள்வது போன்றவை மக்களின் முடிவை பொறுத்து உள்ளது. எனவே ஏதாவது நோய் அறிகுறிகள் காணப்பட்டால் அவர்களை மருத்துவ மனைக்கு அழைத்து சென்று சிகிச்சை பெற வலியுறுத்த வேண்டும்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிப்பதற்கான கூடுதல் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது, உயிரிழப்பை குறைப்பது போன்ற பணிகளில் அதிகம் கவனம் செலுத்து வேண்டும்.

    தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சைக்கு வசூலிக்கப்படும் கட்டணங்களை மாவட்ட கலெக்டர்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். அரசின் விதி முறைகளை பின்பற்றி கட்டணம் வசூலிக்கிறார்களா? அல்லது அதிகம் கேட்கிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும்.

    நோய் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் அக்டோபர் மாதம் அதை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தவும், சிகிச்சை அளிக்கவும் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் உள்ள கட்டிடங்கள் சிகிச்சை மையங்களாக செயல்பட்டு வருகிறது.

    விரைவில் கல்வி நிலையங்கள் திறக்கப்பட உள்ளதால் அங்கு அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையங்களை இடம் மாற்றம் செய்ய வேண்டும். இன்னும் 2, 3 மாதங்களில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த விதிகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்.

    இதற்காக உள்ளாட்சி அமைப்புகள், காவல் துறையுடன் இணைந்து அபராதங்கள் விதிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×