என் மலர்
செய்திகள்

வில்லியனூர் அருகே திருமண ஏக்கத்தில் காவலாளி தூக்குபோட்டு தற்கொலை
வில்லியனூர்:
ஏம்பலம் அருகே தமிழக பகுதியான பாக்கத்தை சேர்ந்தவர் முத்துகுமரன் (வயது44). இவர் வில்லியனூர் ஆச்சார்யாபுரம் மூகாம்பிகை நகரில் புதிதாக கட்டிவரும் ஒரு வீட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. போதிய வருமானம் இல்லாததால் இவருக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் முத்துகுமரன் மன வருத்தத்தில் இருந்து வந்தார். குறைந்த வயது உள்ளவர்களுக்கும், வருமானம் இன்றி, வேலை இல்லாமல் ஊரை சுற்றி வருபவர்களுக்கும் திருமணம் நடக்கும்போது தனக்கு மட்டும் திருமணம் கை கூடவில்லையே என்று முத்துகுமரன் விரக்தியில் இருந்து வந்தார்.
இதனால் மனமுடைந்த முத்துகுமரன் நேற்று தான் வேலை பார்க்கும் கட்டிடத்தின் அருகே கட்டுமான பொருட்கள் வைத்திருக்கும் கூரை கொட்டகையில் கயிற்றால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த தகவலின் பேரில் மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






