என் மலர்
செய்திகள்

சரவணம்பட்டியில் ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி வீட்டில் ரூ.30 லட்சம் திருட்டு
கோவை:
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சித்ரா நகரை சேர்ந்தவர் துரைசாமி (வயது 70). மத்திய அரசின் எண்ணை நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு சொந்தமான தோட்டத்தை விற்று ரூ. 30 லட்சம் பணத்தை வீட்டில் வைத்து இருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு துரைசாமி குடும்பத்துடன் கோபி செட்டிப்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.
இன்று காலை வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த துரைசாமி வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் துரைசாமி தோட்டத்தை விற்று வைத்து இருந்த ரூ. 30 லட்சம் ரொக்க பணம், 10 பவுன் தங்க நகைகள் ஆகியற்றை திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து துரைசாமி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து போலீசார் வீட்டின் கதவை உடைத்து பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்.
மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.