என் மலர்
செய்திகள்

விபத்தில் இறந்த சக்திவேல்.
நெட்டப்பாக்கம் அருகே லாரி மோதி விவசாயி பலி
நெட்டப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் நெல்லிக்குப்பம் விவசாயி உடல் நசுங்கி செத்தார். அவரது உடலை எடுக்க விடாமல் உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாகூர்:
நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் அருகே கொங்கரானூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 49). விவசாயி. இவருக்கு பானுமதி (42) என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகளும் உள்ளனர். நேற்று காலை சக்திவேல் தனது மனைவி பானுமதியுடன் நெட்டப்பாக்கம் பகுதியில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மோட்டார் சைக்கிளில் வந்தார்.
மடுகரை சாலையில் நெட்டப்பாக்கத்தை அடுத்த கல்மண்டபம் என்ற இடத்தில் தனியார் தொழிற்சாலை அருகே வந்துகொண்டிருந்தபோது, அந்த தொழிற்சாலைக்கு வந்த கண்டெய்னர் லாரி திடீரென்று இடது புறமாக திரும்பியது. இதில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் லாரி முன்பக்கம் சிக்கிய சக்திவேல், பானுமதி ஆகியோர் மீது சக்கரம் ஏறி இறங்கியது. இதை கவனிக்காமல் டிரைவர் தொடர்ந்து சென்றதால் பின்பக்க சக்கரத்தில் சக்திவேல் சிக்கி, உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். பானுமதி படுகாயம் அடைந்தார்.
இந்த விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள் படுகாயமடைந்த பானுவை மீட்டு மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்து நெட்டப்பாக்கத்தில் உள்ள சக்திவேலின் உறவினர்கள் அங்கு வந்தனர். அவர்கள் சக்திவேலின் உடலை எடுக்க விடாமல் தொழிற்சாலை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தகவல் அறிந்த நெட்டப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர்கள், சக்திவேல் இறந்ததால் அவரது குடும்பம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே அவரது சாவுக்கு இழப்பீடு வழங்கவேண்டும், அவரது மகனுக்கு சம்பந்தப்பட்ட தனியார் தொழிற்சாலையில் வேலை வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதுபற்றி தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது. இதன்பின்னர் சக்திவேலின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Next Story






