என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்கள் நீதி மய்யம்
    X
    மக்கள் நீதி மய்யம்

    தன் தவறை மறைக்க கவர்னரை வம்புக்கு இழுப்பதா?- அமைச்சருக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்

    கொரோனா தடுப்பு முயற்சியில் தோல்வி அடைந்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், தன் தவறை மறைக்க கவர்னரை வம்புக்கு இழுக்கிறார் என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஒட்டுமொத்த யூனியன் பிரதேசத்திற்கும் தான் சுகாதாரத்துறை அமைச்சர் என்பதை மறந்து மல்லாடி கிருஷ்ணாராவ் செயல்பட்டு வருகிறார். ஏனாம் கொரோனா நோயாளிகளுக்கு மட்டும் அசைவ உணவுகள் வழங்க ஏற்பாடு செய்துள்ளார். இதை மக்கள் நீதி மய்யம் சுட்டிக்காட்டியவுடன் அங்குள்ள தன்னார்வல தொண்டு நிறுவன செலவில் வழங்கப்படுவதாக கூறுகிறார்.

    புதுச்சேரி, காரைக்காலில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு அசைவ உணவு வழங்க எந்த தனியார் தொண்டு நிறுவனத்திடமாவது பேசினாரா? அல்லது அழைப்பாவது விட்டாரா? இவை எதையும் செய்யாமல் புறக்கணித்துவிட்டு தற்போது சப்பை கட்டு கட்டுகிறார்.

    தனது தவறை மூடி மறைக்க கவர்னர் கிரண்பேடியை சண்டைக்கு இழுக்கிறார். உண்மையில் இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் கொரோனா நோயாளிகளை சந்திப்பவன் ஹீரோ இல்லை. சக அமைச்சர்களுக்குக்கூட கொரோனா தொற்று வராமல் பாதுகாக்க தவறிவிட்டார்.

    கடந்த சில தினங்களாக அருகில் உள்ள தமிழக மாவட்டங்களைவிட இங்கு கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கெல்லாம் காரணம் நோய்த்தொற்று பரவலை தடுக்க ஹீரோவாக செயல்பட வேண்டிய சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அதுபோல் செயல்படாமல் இருப்பதுதான்.

    ஆரம்பகாலத்தில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு உணவும், தங்கும் இடமும் வழங்கப்பட்டது. தற்போது இடம் மட்டுமே வழங்கப்படுகிறது, உணவுகூட வழங்கப்படுவது இல்லை. இதனால் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையே தற்போது வரை உள்ளது. அதுபோல் கொரோனா நோயாளிகளுக்கு என மாத்திரை மார்க்கெட்டிற்கு வந்துள்ளது. இதை நோயாளிகளுக்கு வழங்கினால் விரைவில் அவர்கள் குணமடைவார்கள். ஆனால் அந்த மாத்திரையைக்கூட இதுவரை வாங்கித்தரவில்லை. புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தி, குணப்படுத்தும் நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டார்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×