search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சிறுமியுடன் சேர்ந்து இருந்ததை செல்போனில் புகைப்படம் எடுத்து மிரட்டல் - வாலிபர் கைது

    புதுக்கோட்டையில் தொடரும் சம்பவமாக, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, அவருடன் சேர்ந்து இருந்ததை செல்போனில் புகைப்படம் எடுத்து மிரட்டிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    கீரனூர்:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதத்தில் ஏம்பலை சேர்ந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டாள். இதில் கொலையாளி ராஜாவை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கந்தர்வகோட்டையில் சிறுமி பாலியல் வன்கொடுமையினால் பாதிக்கப்பட்டது தொடர்பாக, 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.

    இதேபோல் திருக்கோகர்ணம் பகுதியில் 17 வயது சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவங்களில் தொடர்புடையவர்கள் அனைவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மீண்டும் ஒரு சம்பவமாக, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அதன் விவரம் வருமாறு:-

    புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே ராப்பூசல் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 26). இவர் தனது உறவினரான 15 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். மேலும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், ஒன்றாக சேர்ந்து இருந்ததை செல்போனில் புகைப்படம் எடுத்து வைத்து மிரட்டுவதாகவும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், கீரனூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் முருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். கைதான அவரை புதுக்கோட்டை கிளை சிறையில் போலீசார் அடைத்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் கைதாகும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×