என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
முதுமலையில் சந்தன மரங்கள் வெட்டிய வழக்கு - மேலும் 3 பேரை பிடிக்க தீவிரம்
முதுமலையில் சந்தன மரங்கள் வெட்டி கடத்த முயன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் 3 பேரை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கூடலூர்:
முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட (வெளிமண்டலம்) மசினகுடி வனப்பகுதியில் வனச்சரகர் மாரியப்பன் தலைமையிலான வனத்துறையினர் கடந்த 27-ந் தேதி ரோந்து சென்றனர். அப்போது வனத்தில் நின்றிருந்த சந்தன மரத்தை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொண்டிருந்தது. இதைக்கண்ட வனத்துறையினர் ஓடி சென்று அவர்களை பிடிக்க முயன்றனர்.
இதில் மசினகுடியை சேர்ந்த மகேஷ்குமார் (வயது 32), கேத்தன் (48) ஆகிய 2 பேர் பிடிபட்டனர். மீதமுள்ளவர்கள் தப்பி ஓடினர். தொடர்ந்து பிடிபட்டவர்களிடம் இருந்து 27 கிலோ சந்தன மரக்கட்டைகள், கோடாரிகள், அரிவாள்களை
வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பின்னர் தொடர் விசாரணை நடத்திய போது கர்நாடகா மாநிலம் குண்டல்பேட் பகுதியை சேர்ந்த கரியன் (30) மசினகுடியில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து கரியனை வனத்துறையினர் பிடித்தனர். இது குறித்து
மசினகுடி வனத்துறையினர் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் பிடிபட்ட மகேஷ்குமார், கேத்தன், கரியன் ஆகிய 3 பேரை கைது செய்து கூடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனிடையே சந்தனமரங்களை வெட்டி கடத்த முயன்ற வழக்கில் தலைமறைவாக உள்ள கர்நாடகா மாநிலம் குண்டல்பேட் மங்களாவை சேர்ந்த நாகேந்திரன், பாலன், மசினகுடி மாறன் ஆகிய 3 பேரை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக கர்நாடகா மாநில வனத்துறையினரிடம் ஆலோசித்து வருகின்றனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, சந்தனமரம் கடத்த முயன்ற வழக்கில் தொடர்புடையவர்கள் கடந்த காலங்களில் வனத்துக்குள் கைவரிசை காட்டி உள்ளனரா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
மேலும் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கடத்தல் கும்பலுக்கும், கைது செய்யப்பட்டவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் கர்நாடகா வனத்துறையினருடன் இணைந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரையும் விரைவில் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story






