என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
நீலகிரியில் 179 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் - 30 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை
நீலகிரியில் 179 தனிமைப் படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுவரை 30 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த மே மாதம் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. இதற்கிடையே மஞ்சூர் அருகே கிராமங்களில் நடந்த திருமண, துக்க நிகழ்ச்சிகளில் தொற்று பாதித்தவர்கள் கலந்து கொண்டனர். இதனால் நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்றவர்களுக்கும் கொரோனா பரவியது. இதனால் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அறிகுறி கண்டறியப்பட்ட கிராமங்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து இருக்கிறது. கடந்த 3 வாரங்களில் பாதிப்பு வேகமானதால் 550-ஐ கடந்து உள்ளது. தற்போது நீலகிரியில் 179 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அப்பகுதிகளில் மக்கள் வெளியே வராமலும், வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்லாமலும் காவல்துறை மூலம் தடுப்புகள் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு சம்பந்தப்பட்ட நகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சிகள் சார்பில் தினமும் கிருமி நாசினி தெளிக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகின்றன. மருத்துவ குழுக்கள் மூலம் நாள்தோறும் பொதுமக்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.
ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை நடந்து வருகிறது. தற்போது வைரஸ் தொற்று ஏற்பட்ட நபர்களுடன் முதல், இரண்டாம், மூன்றாவது தொடர்பில் இருந்த நபர்களை கண்டறிந்து சளி மாதிரி எடுக்கப்படுகிறது. அவ்வாறு தொடர்பில் இருந்த நபர்களுக்கு பாதிப்பு உறுதியானால் அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களிடம் இருந்தும் மாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்படுகிறது. தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் தொடர்பில் இருந்தவர்களை கண்காணித்து பரிசோதனை செய்வது சவாலாக உள்ளது. இருப்பினும், சுகாதாரத்துறை சரியான வழியில் சென்று கொண்டிருக்கிறது. நீலகிரி மாவட்டத்தில் பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்திற்குள் கிடைத்து வருகின்றன.
நீலகிரியில் பாதிப்பு அதிகரித்து வருவதால் இதுவரை 30 ஆயிரத்து 100-க்கும் மேற்பட்ட நபர்களிடம் இருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து ஊட்டிக்கு இ-பாஸ் பெற்று வருபவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
Next Story






