search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுச்சேரி சட்டசபை
    X
    புதுச்சேரி சட்டசபை

    புதுச்சேரி சட்டசபை தொடங்கியது- கவர்னர் உரை நிறுத்தி வைப்பு

    புதுச்சேரியில் முதல் முறையாக துணைநிலை கவர்னர் கிரண்பேடி பங்கேற்காமல் சட்டசபை கூட்டம் தொடங்கியது.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வழக்கம். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்து அதன்பிறகு முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த ஆண்டும் கடந்த மார்ச் மாதம் (ஏப்ரல், மே, ஜூன்) 3 மாதங்களுக்கான அரசின் செலவினங்களுக்காக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 

    இதற்கான அவகாசம் நிறைவடைந்த நிலையில் கடந்த ஜூன் 30--ந்தேதிக்குள் முழு பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெற்று இருக்க வேண்டும். இந்தநிலையில் ரூ.9,500 கோடிக்கு முழுபட்ஜெட் தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 3 நாட்களுக்கு முன் புதுவை மாநில பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. 

    இதையடுத்து சட்ட சபையை கூட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. காலை 9.30 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் கவர்னர் உரையாற்றுவார். அதற்கு அடுத்து நிதி பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இதற்கிடையே கவர்னர் உரை தயாரிக்கப்பட்டு ஒப்புதலுக்காக கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தநிலையில் கவர்னர் கிரண்பேடி அந்த உரையை படித்துப் பார்க்க கூடுதல் நேர அவகாசம் வேண்டும் என்று தலைமைச் செயலாளர் மூலம் அரசுக்கு திடீரென தகவல் அனுப்பியதாக தெரிகிறது.

    இதையொட்டி முதல்- அமைச்சர் நாராயணசாமி தலைமையில் திடீர் ஆலோசனை கூட்டம் நேற்று இரவு நடந்தது. கூட்டத்தில் அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜகான், கந்தசாமி, கமலக்கண்ணன், வைத்திலிங்கம் எம்.பி., துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் இன்று காலைக்குள் உரையை படித்துவிட்டு சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற வேண்டும் என்று கவர்னருக்கு தலைமைச் செயலாளர் மூலம் கடிதம் அனுப்பியதாக தெரிகிறது.

    கவர்னர் கிரண்பேடி சட்டசபைக்கு வந்து உரையாற்றவில்லை என்றால் சபையை ஒத்தி வைத்துவிட்டு ஏற்கனவே திட்டமிட்டபடி பகல் 12.05 மணி அளவில் மீண்டும் சட்டசபையை கூட்டி 2020-21-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வது என முடிவு செய்திருப்பதாக கூறப்பட்டது.

    அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் சிவக்கொழுந்து தலைமையில் சட்டசபை தொடங்கியது. சுமார் 15 நிமிடங்கள் கவர்னர் கிரண்பேடிக்காக காத்திருந்தனர். அதுவரை அவர் வராததால் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டசபையில் கவர்னர் நிகழ்ந்த வேண்டிய உரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், மதியம் 12.05 மணிக்கு முதலமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என்று கூறிய சிவக்கொழுந்து சட்டசபையை ஒத்திவைத்தார்.
    Next Story
    ×