search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊரடங்கு உத்தரவு
    X
    ஊரடங்கு உத்தரவு

    நீலகிரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு: வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடின

    நீலகிரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதால், வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடின. மேலும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
    ஊட்டி:

    கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று ஜூலை மாதத்தின் 2-வது ஞாயிற்றுக்கிழமை என்பதால் நீலகிரி மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. ஊட்டியில் கமர்சியல் சாலை, லோயர் பஜார், அப்பர் பஜார், சேரிங்கிராஸ், ஏ.டி.சி., எட்டின்ஸ் சாலை, பிங்கர்போஸ்ட், ஹில்பங்க், ராஜீவ் காந்தி ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. காய்கறிகள், மளிகை பொருட்கள், நகைக்கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டதால், அந்த பகுதிகள் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது.

    மேலும் ஆட்டோ, வாடகை வாகனங்கள் ஓடவில்லை. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் செயல்படாததால், அதன் முன்பு கயிறுகள் கட்டி வைக்கப்பட்டு இருந்தது. முழு ஊரடங்கு என்பதால் பால், மருந்து, மாத்திரைகளை வாங்க மட்டுமே சிலர் வெளியில் வந்தனர். இதற்காக பால் விற்பனை கடைகள், மருந்துக்கடைகள் திறக்கப்பட்டன.

    இது தவிர ஊட்டியில் நகராட்சி மார்க்கெட் மூடப்பட்டது. அனைத்து நுழைவு வாயில்களுக்கும் பூட்டப்பட்டு, அங்குள்ள 1,300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஊட்டி நகரில் கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடியதால் கால்நடைகள், தெருநாய்கள் சுதந்திரமாக உலா வந்ததை காண முடிந்தது. ஊட்டியில் சேரிங்கிராஸ், ஏ.டி.சி., பிங்கர்போஸ்ட், லவ்டேல் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முழு ஊரடங்கை மீறி வெளியில் யாராவது சுற்றி வருகிறார்களா? என்று தீவிரமாக கண்காணித்தனர். நீலகிரி மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதோடு, தற்காலிகமாக தடுப்புகள் வைத்து கண்காணித்தனர்.

    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நேற்று கடைபிடிக்கப்பட்ட முழு ஊரடங்குக்கு ஊட்டியில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தனர். தேவையின்றி வெளியே வருவதை தவிர்த்ததோடு, வாகனங்களும் வெளியே வரவில்லை. எனினும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    இதேபோன்று கூடலூர், குன்னூர், பந்தலூர், மசினகுடி பகுதிகளில் எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை. மேலும் மக்கள் நடமாட்டமும் இல்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. கூடலூர் பகுதியில் மருந்து கடைகள் மட்டும் திறந்து இருந்தது. மேலும் பால் வினியோகமும் நடைபெற்றது. கூடலூரில் இருந்து ஊட்டி, கோழிக்கோடு, சுல்தான்பத்தேரி, மைசூரூ செல்லும் சாலைகள் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி கிடந்தது. இது தவிர தேவையின்றி வெளியே நடமாடியவர்களை கூடலூர் புதிய மற்றும் பழைய பஸ் நிலைய பகுதியில் பாதுகாப்பு பணிக்கு நின்றிருந்த போலீசார் எச்சரித்து வீடுகளுக்கு அனுப்பினர்.

    கோத்தகிரி நகரின் முக்கிய பகுதிகளான ராம்சந்த் சதுக்கம், பஸ் நிலையம், காமராஜர் சதுக்கம், டானிங்டன், காந்தி மைதான திறந்தவெளி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகள் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் மருந்து கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தாலும், பொதுமக்கள் வருகை இல்லாததால் பெரும்பாலான மருந்து கடைகள் மற்றும் பால் பூத்துக்கள் மூடப்பட்டு இருந்தன.
    Next Story
    ×