search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திம்பம் மலைப்பாதையில் ரோட்டில் படுத்து கிடந்த சிறுத்தையை காணலாம்
    X
    திம்பம் மலைப்பாதையில் ரோட்டில் படுத்து கிடந்த சிறுத்தையை காணலாம்

    திம்பம் மலைப்பாதையில் ரோட்டில் படுத்து கிடந்த சிறுத்தை- வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

    திம்பம் மலைப்பாதையில் ரோட்டில் படுத்து கிடந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிறுத்தை வனப்பகுதிக்குள் சென்ற பின்னர் வாகனங்கள் சென்றன.
    ஈரோடு:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் தாளவாடி, ஜீர்கள்ளி, தலமலை, ஆசனூர், கேர்மாளம், கடம்பூர், டி.என்.பாளையம், சத்தியமங்கலம், விளாமுண்டி, பவானிசாகர் என மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    மேலும் சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம், ஆசனூர் வழியாக திண்டுக்கல்- மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலை அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. வனவிலங்குகள் இந்த சாலையை அடிக்கடி கடப்பது வழக்கம். மேலும் திம்பம் மலைப்பாதையில் புலி தாக்கி பலர் இறந்து உள்ளனர். இதனால் திம்பம் மலைப்பாதை வழியாக இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்ல வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர்.

    இந்தநிலையில் தாளவாடியில் இருந்து சத்தியமங்கலத்துக்கு காரில் 2 பேர் சென்று கொண்டிருந்தனர். திம்பம் மலைப்பாதையின் 27-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது ரோட்டோரத்தில் சிறுத்தை படுத்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் தங்கள் காரை சிறிது தூரத்தில் நிறுத்தினர். பின்னர் காரில் இருந்தபடி ரோட்டில் படுத்து கிடந்த சிறுத்தையை அவர்கள் தங்களுடைய செல்போனில் படம் பிடித்தனர்.

    ரோட்டில் சிறுத்தை படுத்து கிடந்த தகவல் அறிந்ததும் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் அப்படியே நின்றன. ரோட்டில் சிறிது நேரம் படுத்துக்கிடந்த சிறுத்தை பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. இதைத்தொடர்ந்து வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றன. 
    Next Story
    ×