என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் இன்னசென்ட் திவ்யா
    X
    கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

    பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம்- கலெக்டர் எச்சரிக்கை

    கொரோனா பரவுவதை தடுக்க நீலகிரி மாவட்ட எல்லை மூடப்பட்டு உள்ளது. மேலும் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் கலெக்டர்களுடன் நடந்த ஆய்வு கூட்டத்தில் மண்டலங்களுக்குள் வாகன போக்குவரத்தை ரத்து செய்து, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    இந்த நடைமுறை நீலகிரியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் அமல்படுத்தப்பட்டது. அதன்படி மாவட்ட எல்லையில் உள்ள பர்லியார், குஞ்சப்பனை, கெத்தை உள்பட 13 சோதனைச்சாவடிகள் மூடப்பட்டது. வெளிமாவட்டங்களில் இருந்து இ-பாஸ் பெற்று வரும் வாகனங்கள் மட்டுமே உள்ளே வர அனுமதிக்கப்படுகிறது. இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். இதை மீறுபவர்களுக்கு ரூ.50 அபராதம் விதிக்கப்படும். தும்மும் போதும், இருமும் போதும் கைக்குட்டை அல்லது மெல்லிடைத்தாள் உபயோகிக்க வேண்டும். பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது. இதை மீறுபவர்களுக்கு ரூ.1,000அபராதம் விதிக்கப்படும். பொது இடங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இதை மீறுபவர்களுக்கு ரூ.50 அபராதம் விதிக்கப்படும்.

    அனைத்து வணிக நிறுவனங்களும் தங்களின் கடைக்கு முன்பாக சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கான குறியீடுகளை அமைக்க வேண்டும். குறியீடுகளை அமைக்காத கடைகளை திறக்க அனுமதி இல்லை. மேலும் 144 தடை உத்தரவு சட்டம் மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்தியாவசிய தேவைகளான மருத்துவ சிகிச்சை, ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம் மற்றும் இறப்பு தவிர வேறு தேவைகளுக்காக வெளியூர் பயணம் செல்லக்கூடாது. தேவையற்ற விழாக்கள், நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×