search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகங்கையில் சீரமைக்கப்பட்ட மருத்துவமனையை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்
    X
    சிவகங்கையில் சீரமைக்கப்பட்ட மருத்துவமனையை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்

    ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் சீரமைப்பு- கொரோனா சிறப்பு வார்டு மருத்துவமனை

    சிவகங்கையில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட 52 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிறப்பு வார்டு மருத்துவமனையை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்.
    சிவகங்கை:

    சிவகங்கையில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தொடங்கப்படுவதற்கு முன்பு சிவகங்கை-இளையான்குடி ரோட்டில் மாவட்ட தலைமை மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இந்த மருத்துவமனையை சீரமைத்து அதை கொரோனா சிறப்பு வார்டுடன் தனிமைப்படுத்தும் மருத்துவமனையாக மாற்றப்பட்டது.

    இதன் திறப்பு விழா மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன் முன்னிலை வகித்தார். அமைச்சர் பாஸ்கரன் தனிமைப்படுத்துதல் மருத்துவமனையை திறந்து வைத்தார். அதன் பின்னர் அவர் கூறியதாவது:-

    சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யபட்டவர்களுக்கு சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தற்போது மருத்துவமனைக்கு வரும் மற்ற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சிவகங்கையில் ஏற்கனவே செயல்பட்ட மருத்துவமனை கட்டிடத்தை ரூ.30 லட்சம் செலவில் சீரமைத்து கொரோனா சிறப்பு வார்டுடன் தனிமைப்படுத்துதல் மருத்துவமனையாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 45 படுக்கை வசதிகள் கொண்ட அறைகளும், 7 படுக்கைகள் வசதி கொண்ட தீவிர சிகிச்சைப்பிரிவு சிறப்பு வார்டுகளும் என மொத்தம் 52 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு சுழற்சி முறையில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் என 124 பேர் பணியாற்றி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ரெத்தினவேல், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஷீலா, மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிலைய மருத்துவர் மீனாள், பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி, உதவி நிலைய அலுவலக மருத்துவர்கள் முகமதுரபீ, மிதுன், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் கேசவன், கூட்டுறவு அச்சக தலைவர் சசிகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×