search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    மாங்காட்டில் வடமாநில தொழிலாளர்கள் உள்பட 11 பேருக்கு பாதிப்பு

    மாங்காட்டில் வடமாநில தொழிலாளர்கள் உள்பட 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
    படப்பை:

    காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு, ஆஞ்சநேயர் கோவில் தெரு பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் சிலர் தங்கி உள்ளனர். அதில் 10 பேருக்கும், ரகுநாதபுரத்தை சேர்ந்த ஒருவருக்கும் என நேற்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அனைவரும் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் போரூரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.

    இவர்களுடன் ஏற்கனவே தங்கி இருந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், இவர்களுக்கு ரத்த மாதிரி பரிசோதனை செய்ததில் 11 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

    இதனால் அந்த பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இவர்கள் வேலை செய்த இடத்தில் ஆய்வு செய்து அங்கிருப்பவர்களிடமும் சோதனை செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    படப்பையை அடுத்த வரதராஜபுரம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த 35 வயது வாலிபருக்கும், படப்பை பகுதியைச் சேர்ந்த 24 வயது பெண்ணுக்கும் நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானது. இருவரும் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இவர்கள் உள்பட காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று 17 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 203 ஆனது. இவர்களில் 107 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். ஒருவர் உயிரிழந்தார். 95 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×