என் மலர்
செய்திகள்

தொழிற்சாலைகளில் பணி நேரம் அதிகரிப்பு ஆட்குறைப்புக்கு வழிவகுக்கும்- இந்திய கம்யூ. கண்டனம்
புதுச்சேரி:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் புதுவை மாநில செயலாளர் சலீம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் உள்ள தொழிற்சாலைகளின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தியதை அரசு திரும்பப் பெற வேண்டும். மத்திய தொழிலாளர் அமைச்சகம் மாநிலங்களுக்கு பணி நேரத்தை அதிகரிக்க நிர்பந்தித்து வருகிறது. மத்திய பா.ஜனதா அரசின் நிர்ப்பந்தத்தின் காரணமாக பணி நேர அதிகரிப்பு செய்யப்பட்டிருப்பதாக அறிகிறோம்.
தொழிலாளர் நலச்சட்ட திருத்தங்களுக்கு எதிராகவும், பணி நேர அதிகரிப்புக்கு எதிராகவும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். ஆனால், காங்கிரஸ் ஆளும் மாநிலத்தில் 8 மணி நேர உரிமை பறிக்கப்படுகிறது.
கொரோனா பொது முடக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் தொழிலாளர்களே. அவர்களுக்கு பொது முடக்க காலத்திற்கான ஊதியம், தடையற்ற வேலைவாய்ப்பு, தற்காலிக, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு ஆகியவற்றை உத்தரவாதப்படுத்துவதே அரசின் நோக்கமாக இருக்க வேண்டும்.
பணி நேர அதிகரிப்பு பெருமளவில் ஆட் குறைப்புக்கு வழிவகுக்கும். புதுவையின் சமூக பொருளாதாரம் பாதிப்படையும். எனவே, முதலாளிகளுக்கு ஆதரவான பணி நேர அதிகரிப்பு ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு சலீம் அறிக்கையில் கூறியுள்ளார்.






