என் மலர்
செய்திகள்

வறுமைக் கோட்டிற்குக்கீழ் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்- திருக்கோவில் பாதுகாப்பு சங்கத்தினர் கோரிக்கை
சீர்காழி:
தமிழ்நாடு திருக்கோவில்கள் பாதுகாப்பு சங்க செயலாளர் பாலசுப்பிரணியன் முதல்வருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன.
இந்த ஊரடங்கு காலத்தில் வேலைக்கு செல்லாமல் வருவாய் இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கி உள்ள மக்களுக்கு தமிழக அரசு ரூ.ஆயிரம் பணம் மற்றும் ரேஷன் பொருட்களை வழங்கியது.
வரும் மாதத்திற்கான ரேஷன் பொருட்களையும் இலவசமாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழக அரசின் உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் அரிசி வாங்க கூடிய ஒரு கோடியே 85 லட்சத்து 73 ஆயிரத்து 328 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பணம் மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இதில் 45 சதவீதம் உள்ள அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணி பணிபுரிந்து வருபவர்களும், 55 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை, எளிய தினக்கூலி தொழிலாளர்களும் பெறுகின்றனர்.
எனவே அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் 30 ஆயிரத்துக்கு மேல் ஊதியம் பெறுகின்ற வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களை தவிர்த்து வேலை இழந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ள 55 சதவீத ஏழை, எளிய தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் கோயில் பணியாளர்கள், அர்ச்சகர்கள், கிராம கோவில் பூசாரிகள் ஆகியோரை கணக்கிட்டு அவர்களுக்கு இந்த பேரிடர் காலத்தில் வழங்கப்படும் ரூபாய் ஆயிரத்தை உயர்த்தி மாதம் ரூ.5 ஆயிரமாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






