என் மலர்
செய்திகள்

அம்மாபேட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்- 2 பேர் பலி
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே பூனாச்சி பகுதி முகாசிபுதூர் காலனியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 20). இவர் எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் பூவரசன் மேட்டூரில் ஐ.டி.ஐ இறுதி ஆண்டு படித்து வந்தார். மணிகண்டனும் பூவரசனும் நண்பர்கள்.
இந்நிலையில் நேற்று மாலை மணிகண்டன் தனது மோட்டார் சைக்கிளில் மேட்டூருக்கு சென்று பூவரசனை அழைத்துக் கொண்டு அம்மாபேட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். வண்டியை மணிகண்டன் ஓட்ட பின்னால் பூவரசன் அமர்ந்து வந்து கொண்டிருந்தார்.
அம்மாபேட்டை அருகே சின்னபள்ளம் பகுதியில் வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்ற வாகனத்தை முந்தி மணிகண்டன் சென்ற போது எதிரே வந்த லாரியின் பக்கவாட்டில் இடித்து மணிகண்டன், பூவரசன் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் சம்பவ இடத்திலேயே தலையில் பலத்த காயம் அடைந்து மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். பூவரசன் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அம்மாபேட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொணடு இருந்த பூவரசனை மீட்டு மேட்டூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பூவரசன் பரிதாபமாகஇறந்தார்.
இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த மணிகண்டன் உடல் பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் நண்பர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அம்மாபேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






